மியான்மாரில் 114 பேரைக் கொன்றது இராணுவம்

மியான்மரில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 114 பேர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பிப்ரவரி முதல் நாளில் இராணுவம் கவிழ்த்தது. முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதைக் கண்டித்துப் போராட்டம் நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கொடுமையான அடக்குமுறைகளை ராணுவம் கையாண்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளியன்று தேசிய ஆயுதப்படை நாளையொட்டி யாங்கன், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 114 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். படுகொலை செய்த மியான்மர் ராணுவ ஆட்சிக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.