Mai 10, 2024

மணிக்கு கொரோனா:அச்சத்தில் வடமாகாணம்!

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனுடன் தொடர்புபட்டு நிகழ்வுகளில் பங்கெடுத்த பலரும் கொரோனா தொற்று அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஜநா உதவி அமைப்பொன்றால் திருநெல்வேலியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தமர்வில் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள்;,வடமாகாணசபையின் உயர்மட்ட அதிகாரிகள்,உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள் என பலரும் பங்கெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மாநகர முதல்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியிருந்தது.

இந்நிலையிலேயே பருத்தித்துறை நீதிமன்ற அமர்வில் சுமந்திரன்,சாணக்கியன் உள்ளிட்டோருடனும், ஜநா உதவி அமைப்பொன்றால் திருநெல்வேலியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தமர்வில் மாகாணசபை அதிகாரிகளுடனும் வி.மணிவண்ணன் பங்கெடுத்துள்ளார்.

அதேவேளை ,20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தோர். தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் , சுகாதார பரிசோதகர்களுக்கு தங்களது விபரங்களை வழங்குமாறும்  முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.