April 26, 2024

கைப்பொம்மையான அதிகாரத்துடன் புதிய ஆட்சி!

காலிமுகத்திடல் போராட்டகாரர்களால் காலியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பாரிய போரட்டத்தின் போது தமிழில் வெளியிடப்பட்ட அறிக்கையில்

உங்கள் மீதும், இந்த சமூகத்தின் மீதும் கொண்ட எல்லையற்ற அன்பினால் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களாகிய நாம் உங்களுக்கு இவ்வாறு எடுத்துரைக்கின்றோம். இந்த தீவைச் சிக்கலுக்குள் தள்ளிவிட்ட, கொடுங்கோல் ஆட்சி செய்த ஜனாதிபதி ஒருவரை இந்து சமுத்திரத்துக்கு அப்பால் விரட்டியடித்து அதிகாரவெறிபிடித்த குடும்ப ஆட்சியின் தந்தத்தை உடைத்தெறிந்து மண்டியிடவைத்த மக்கள் போராட்டத்தின் முதற்கட்டம் ஜூலை மாதம் 9ம் திகதி நிறைவேறியது.

அது இலங்கையின் வரலாற்றைச் சரியான முறையில் வாசிக்கும் எந்தவொருவருக்கும் தவிர்க்கமுடியாத மக்களின் வெற்றி ஆகும். அந்தப் போராட்டத்திற்காக உயிர்த்தியாகம் செய்த, தனது சொத்துக்களைத் தியாகம் செய்து, சிறைவாசம் அனுபவதித்து இரத்தம் சிந்திய, வியர்வை சிந்திய எல்லாப் போராட்டக்காரர்களையும் முதற்கண் நினைவுகூருகிறோம்.

எனினும் அதிகாரவர்க்கத்தினரின் மக்களுக்கு துரோகமிழைக்கும், சூழ்ச்சி புரிந்து அரசியல் செய்யும் அந்தக் கட்டமைப்பு முற்றிலுமாக இன்னும் அகற்றப்படவில்லை. நான்கு கால்களும் உடைபட்டு நிலத்தில் வீழ்ந்த இந்த அதிகார வர்க்கம், யாப்பின் பிரிவு, உபபிரிவு மற்றும் சரத்து மூலம் நுழைந்து கொண்டு பொதுமக்களின் அபிப்பிராயத்துக்கு எதிராக பாராளுமன்ற அபிப்பிராயத்தைப் பயன்படுத்தி கைப்பொம்மையான அதிகாரத்துடன் மோசமான கூட்டமைப்பினூடக நொண்டியடிக்கும் அதிகாரக் கட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு முதற்கட்ட மக்களின் வெற்றியை மக்கள் அனுபவிப்பதற்கு முன்னரே இரண்டாம் கட்ட மக்கள் போராட்டத்திற்கு செல்வதற்கான நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

அப்போதிருந்து இந்தப் போராட்டத்தினை முடக்க மிகவும் மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சட்டரீதியான கைதுகள், தான்தோன்றித்தனமான கடத்தல்கள், தாக்குதல்கள், அநீதியான முறையில் சிறைப்படுத்துவதன்மூலமும் அரசினால் ஆரம்பிக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. மக்கள் விருப்பத்திற்கு மாறாக உருவாக்கிக்கொள்ளப்பட்ட ஜனாதிபதி, அவர்களுடன் தோல்வி அடைந்த அரசியல் குடும்பம் மற்றும் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்துகொண்டு இந்தப் பொருளாதார சிக்கவினால் மிகவும் கஷ்டப்படும் மக்களுக்கான தீர்வை வழங்காமல் போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குவதற்காக முனைகின்றனர்.

இந்ந மோசமான அநீதியான செயற்பாடுகள் வெட்கமற்ற அரசியல் செயற்பாடுகள் என்பதை நாம் புதிதாகக் கூறவேண்டிய அவசியம் இல்லை. அன்பார்ந்த இலங்கை மக்களே, நாம் இவர்களால் செய்யப்படும் இந்த முறைகேடுகளுக்குப் பயந்தவர்கள் இல்லை. சுதந்திரமான, மக்கள் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மிலேச்சத்தனமற்ற சமூக மக்களின் நல்வாழ்வை இந்த நாடு ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், 1% கூட இந்த அடக்குமுறைகளால் பின்னோக்கி செல்லப்போவதில்லை என்பதனையும் மிக உயரிய நம்பிக்கையுடனும் ஆழ்ந்த திடசங்கற்பத்துடனும் உங்கள் முன் முன்வைக்கின்றோம்

அத்துடன் மிகவும் அமைதியான முறையில் போராட்டம் புரிந்த போராட்டக்காரர்களை வன்முறை புரிந்தவர்களாகப் பிழையான விதத்தில் மக்கள் முன் அடையாளம் காட்டி தெரிவு செய்துகொண்ட சில போராட்டக்காரர்களை பயங்கரவாத முத்திரை குத்தி அரசின் ஒடுக்குமுறைகளை செயற்படுத்த முயற்சிக்கும் சூழ்ச்சி மிக்க சதித்திட்டதை விளங்கிக் கொள்ளுமாறும் அதை முறியடிக்க அன்றும் இன்றும் என்றும் ஆயுதமற்ற வன்முறையற்ற போராட்டக்காரர்களான எம்முடன் கைகோர்க்குமாறு உங்களுக்கு போராட்டக்காரர்களாகிய நாம் அழைப்பு விடுக்கிறோம்.

அன்பார்ந்த இலங்கை மக்களே, ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரலெழுப்புவதற்கும் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நீக்கவும் மக்கள் ஆதரவு பெறாத ரணில் ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பவும், மக்கள் விருப்பத்துக்கு மாறாக செயற்படும் சூழ்ச்சி மிக்க அரசாங்கத்தைக் கலைத்து உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு செல்லவைக்கவும் போராட்டக்காரர்களையும் மக்களையும் இணைத்து வலு சேர்ப்பதற்கான  மக்கள் மன்றத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் நிறைவேற்று அதிகார முறையை உடனடியாக இல்லாதொழிக்கவும் புதிய யாப்பை உருவாக்கி அமுல்ப்படுத்துவும் போராடுவதற்கும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சமூக முறைமையில் மாற்றத்தை உருவாக்குவும் ஒன்றுசேருமாறும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களாகிய நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் எல்லா இலங்கையர்களிடமும் கேட்டுக்கொள்கிறோம்

இதில் எம்மோடு இணையும்படி தொழிற்சங்கங்கள், சமூகமன்றங்கள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புக்கள் என அனைவரையும் அழைக்கின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert