Mai 3, 2024

இலங்கையில் கொரோனா தொற்று நெருக்கடிகளை சமாளிக்க சுவிற்சர்லாந்து அரசு உதவி வழங்கியது

இலங்கையில் தற்போது மிகவும் மோசமாக பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அரசாங்கததிற்கு உதவிகளை வழங்க சில முக்கிய நாடுகள் முன்வந்துள்ளன.

இந்த வகையில், இலங்கைக்கு கொரோனா நோய்த்தொற்;று தொடர்பான சவால்களை சமாளிக்கும் வகையில் சுவிற்சர்லாந்து அரசு கடந்த செவ்வாய்க்கிழமை காலை 0.5 மில்லியனுக்கும் அதிகமான அன்டிஜன் பரிசோதனைகள், 50 சுவாசக் கருவிகள், 150 ஒக்சிஜன் பிரிப்பாக்கி என்பனவற்றுடன் இலங்கை ரூபாய் 800 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பரிசோதனை பொருட்களை வழங்கியுள்ளது.

இந்த உதவியானது, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் நோக்கத்தை கொண்டிருப்பதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் நீணடகால ஒத்துழைப்பின் உறுதித்தன்மையை வெளிப்படுத்தும் குறிகாட்டியாகவும் இருக்கிறது. இலங்கையின் தற்போதைய மிக தீவிரமான சுகாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரச அதிகாரிகளின் மூலம் கோரப்பட்ட உதவிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் மனிதநேய உதவித்திட்ட பிரிவானது கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் உள்ளடங்கலாக இடர்நிலைக் குழுவை அமைத்து, இலங்கையின் கொவிட் 19 சவால்களை கையாளுவதற்கு இயன்றளவான மருத்துவ உதவிகளை உடனடியாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையிலிருந்து அறிவிக்கப்பட்ட தேவைகள் தொடர்பான விபரங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, சுவிற்சர்லாந்து அரசினால் வழங்கப்படகூடிய மனிதாபிமான உதவிப் பொருட்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

இந்த பட்டியலில் உள்ள விபரங்களை பார்த்து அதற்கேற்ப உதவிகள் வழங்கப்பெற்றுள்ளன. ‘சுவிற்சலாந்தின் சூரிச்’ நகரத்திலிருந்து 16 தொன் உதவிப்பொருட்களுடன் சென்ற விமானம் கொழும்பில் கடந்த செவ்வாய்கிழமைஅ விமான நிலையத்தை அடைந்த போது, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுவிற்சலாந்து தூதுவரிடமிருந்து இந்த உதவி பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். அவற்றுள் சுவிஸ் இராணுவ மருந்தகம் வழங்கிய 50 சுவாசக் கருவிகள், 150 ஒக்சிஜன் பிரப்பாக்கிகள் மற்றும் பிற மருத்துவ பொருட்கள் ஆகியவை உள்ளடங்கும். அத்துடன், சுவிஸ் சுகாதார அமைச்சு 0.5 மில்லியனுக்கும் அதிகமான அன்டிஜன் பரிசோதனை கருவிகளை வழங்குகிறது.

இவ்வுதவிப் பொருட்கள் கொழும்பில் சுகாதார அமைச்சினால் பெறப்பட்டு பின்னர் ஏனைய இடங்களுக்கு நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் நிலவும் மருத்துவ மற்றும் மனிதாபிமான தேவைகளை இயன்றளவு நிவர்த்தி செய்யும் முகமாக பகிர்ந்தளிக்கப்படும். ஏற்கனவே கடந்த ஆண்டு கொவிட் 19 சவால்களை கையாள்வதற்கு ஏறத்தாள இலங்கை ரூபா 220 மில்லியன் பெறுமதியான உதவிகளை அளித்து சுவிற்சர்லாந்து அரசு தனது ஆதரவை இலங்கைக்கு வழங்கி இருந்தது. அக்டோபர் 2020 இல், கொழும்பு விமான நிலையத்திற்கான பி.சி.ஆர் சோதனை சாதனத்திற்கு சுவிற்சர்லாந்து நிதியளித்ததுடன் 39,000 பரிசோதனைப் பொதிகளையும் வழங்கியிருந்தது.

கொவிட் 19 காரணமாக வெளிநாட்டில் தங்கியிருந்த இலங்கையர்களை, குறிப்பாக வேலை வாய்ப்பை இழந்த இலங்கையர்களை மீள் அழைத்தல் நடவடிக்கையை ஆதரிக்கும் முகமாக இந்தப் பங்களிப்பின் நோக்கம் அமைந்தது. மேலும் 22 மில்லியன் இலங்கை ரூபாய்களை சுவிஸ் தூதரகம் உள்ளூர் பங்குதாரர்களுக்கு வழங்கி இருந்தது.

சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் இந்த மனிதநேய உதவித்திட்டமானது வறுமைக்கு உட்பட்டவர்கள், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு கொவிட் 19 அவசர உதவிகளை வழங்குவதற்காக இலங்கையில் உள்ள சுகாதார திணைக்களத்தின் பிரிவுகள் மற்றம் மாவட்ட செயலகங்கள் ஆகியவற்றிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கைக்கான இன்றைய மனித நேய பங்களிப்பானது கடந்த ஒரு மாதத்திற்குள் தெற்காசியாவிற்கான சுவிற்சர்லாந்து அரசின் மனிதநேய உதவித்திட்ட பிரிவின் மூன்றாவது உதவி செயற்பாடு ஆகும்.

சமீபத்திய வாரங்களில், சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்த சுவிஸ் மனிதாபிமான உதவித்திட்ட பிரிவு, ஏற்கனவே 13 தொன் உதவிகளை இந்தியாவுக்கும், 30 தொன் உதவிகளை நேபாளத்திற்கும் அனுப்பியுள்ளது. கொவிட் 19 தொற்றுநோயின் பின்னணியில் சுவிஸ் மனிதாபிமான உதவித்திட்ட பிரிவு உலகின் சுகாதார நிலைமைகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, மேலும் சுவிஸ் அரசு, கோரிக்கைகளின் அடிப்படையில் இயன்றவரை உதவிகளையும் ஆதரவையும் வழங்க தயாராக உள்ளதாகவும் இலங்கைக்கான சுவிற்சலாந்து அரசின் தூதுவர் கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.