Mai 2, 2024

விடுதலை புலிகள் இருந்தபோது இந்தியாவிற்கு ஆபத்து இருக்கவில்லை

விடுதலை புலிகள் இருந்தபோது இந்தியாவிற்கு ஆபத்து இருக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்பொழுது அமெரிக்க-இந்திய இராணுவங்கள் இலங்கைக்குள் நுழையலாம் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரஸ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினையில் ரஸ்ய படைகள் இணைந்து பின்னர் பொதுசன வாக்கெடுப்பொன்றை நடாத்தி ரஸ்யாவுடன் இணைந்துள்ளனர். இதுபோன்ற ஆபத்தான நிலைமை வடக்கு,கிழக்கிற்கும் ஏற்படும் என நான் ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்தேன்.

அதேப்போன்று அமெரிக்க-இந்திய இராணுவங்களும் இலங்கைக்குள் நுழையும் நிர்ப்பந்தமும் ஏற்படலாம் என்றும், அதனையே சில அரசியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். இவ்வாறான இராணுவ தலையீட்டுகளை இராஜ தந்திரமாக மூடி மறைத்து செயற்படுவதில் அர்த்தமில்லை.

இலங்கைக்குள் அரசியல் மாற்றமோ அல்லது தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வோ இலங்கையில் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சி எனும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து தமிழர் தரப்பு தமது கைகளை சுட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் ,தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டங்கள் பலமாக இருக்கும் வரை இந்தியாவிற்கு ஆபத்து இருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும்,இந்தியாவிடமே முதலில் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் கேட்கப்பட்டபோது இந்தியா மறுப்பு தெரிவித்த பின்னரே சீனா தலையிட்டுள்ளதாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.