Mai 3, 2024

மன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து உடன் அமுலாகும் வகையில் மன்னார் மாவட்டத்தில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டம், தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு மறு அறிவித்தல் வரும் வரையில் உடன் அமுலாகும் வகையில் இன்று (ஜூன்-25) அதிகாலை 06.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பியர் மேற்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைமுறையில் இருந்த பயணத்தடை இன்று அதிகாலை 04.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளதால் அங்குள்ளவர்கள் வெளியேறவோ, அப்பகுதிக்குள் உள்நுழையவோ தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.