Mai 9, 2024

இணைய வழியூடாக நடைபெறும் வகுப்புக்கள் தொடர்பாக அரசு பரிசீலணை செய்யவேண்டும்!

ஒண்லைன் வகுப்புக்கள் மாணவர்களிற்கு பல்வேறு தாக்கங்களை உருவாக்கும் என்று சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவபோதம் ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்…

கொரோனா நோய் மற்றும் பயணத்தடை காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிப்பினை சந்தித்துள்ளனர். குறிப்பாக ஆலயகுருமார், ஆலயப்பணிகளை செய்பவர்கள், தவில், நாதஸ்வர கலைஞர்கள் என அனைவரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

அத்துடன் பாடசாலைகள் இயங்காமையால் மாணவர்களிற்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஒண்லைன் மூலமான கற்பித்தல் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இது ஒரு வேதனைக்குரிய விடயம். பாடசாலைகளிற்கு நேரடியாக சென்று ஆசிரியர்களூடாக கல்விகற்பதுபோல ஒண்லைன் முறைமை வராது.

அத்துடன் கையடக்க தொலைபேசிகளூடாக பாடங்களை கற்பிக்கும்போது கண் சம்பந்தமான நோய்களும், உளரீதியான நோய்களும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது. இது மாணவர்களை மனரீதியாக பாதிப்பதுடன் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலேயே இந்த கல்வி ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது. அரசாங்கம் இது தொடர்பாக சிந்திக்க வேண்டும்.

அத்துடன் ஒண்லைன் முறையில் கற்றுக்கொள்வதற்கு வசதியில்லாத எத்தனையோ ஏழைக்குடும்பங்கள் இருக்கின்றது.

இவ்வாறான வசதிகுறைவான பலர் எங்களிடம் உதவிகளை கேட்கின்றனர். அந்தவகையில் சில பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளிற்காக கையடக்க தொலைபேசிகளை நாம் வழங்கியிருக்கின்றோம்.

அத்துடன் பயணத்தடையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் ஆலயக்குருமார்களிற்கு பல்வேறு நிவாரண பொதிகளையும் வழங்கி வருவதாக தெரிவித்தார். ஊடக சந்திப்பில் வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் சிவஶ்ரீ முத்து ஜெயந்திநாதக்குருக்கள், பிரபாகரக்குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.