April 28, 2024

ராஜீவ் கொலையில் முன்வைக்கப்படும் கேள்விகள்… பட்டியலிடும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அருகே கோவை வேளாண்மை கல்லூரிப் பேருந்தை தீவைத்து எரித்ததால் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மூன்று மாணவிகள் தீப்பிழம்புகளுக்குப் பலியாகி பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்தத் துயரச் சம்பவத்துக்குக் காரணமான அ.தி.மு.க-வைச் சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவர் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த மூவரும் இப்போது முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட அதிமுகவினர்
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலையில் தொடர்பில்லாத முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் தண்டிக்கப்பட்டு ஆயுள் கைதிகளாக 27 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய அனைத்துத் தரப்பிலிருந்தும் கோரிக்கை வைத்தும், தமிழக அரசு பரிந்துரைத்தும் அவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுவிக்கவில்லை. ஆனால் மூவர் விடுதலை குறித்து, தமிழக ஆளுநர் ஒரு விசித்திரமான, ஏற்றுக்கொள்ள முடியாத அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், `விவசாயக் கல்லூரி மாணவிகளை எரிக்க வேண்டுமென்ற நோக்கம் இந்த மூவருக்கும் இல்லை. கும்பலாகச் சேரும்போது உணர்ச்சிவேகத்தில் பேருந்துக்குத் தீவைத்துவிட்டனர். அதனால் அந்த மாணவிகள் இறந்துவிட்டனர்’ என்று ஓர் அரசியல் சாசனப் பொறுப்பிலிருக்கும் கவர்னர் சாதாரணமாக இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ராஜீவ் படுகொலையைச் சரியாகப் புலனாய்வும் செய்யவில்லை, விசாரணையும் செய்யவில்லை என்று அந்தக் கொடுந்துயரம் நடைபெற்ற 1991-ம் ஆண்டிலிருந்து இந்தக் கருத்துகளை நான் முன்வைத்து வருகிறேன். இந்தக் கோணத்தில் ஏன் புலனாய்வையும், விசாரணையும் நடத்தவில்லை என்பதுதான் நம்முடைய வினா?” என்றவர், அதுகுறித்த வினாக்களை மீண்டும் நம்முன் வைத்தார்.
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
* “1991-ம் வருடம் மே மாதம் 21-ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரசாரத்துக்குப் புறப்பட்டார், ராஜீவ் காந்தி. அவர் ஒடிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, `அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம்’ எனச் சொல்லியும்; ஏன் அங்குக் கூட்டம் நடத்தப்பட்டது? ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?
* புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரசாரத்துக்குச் சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி.சாகர். ஆனால், அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை, ஏன்?
* பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரசாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒடிசாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், பின்னர் ராஜீவ் கலந்துகொண்ட பொதுக்கூட்டங்களுக்குச் செல்லவில்லை. அப்படியானால், அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?
* ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர், `கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது’ என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாகக் கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார், ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக்கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம்செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?
* சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாகச் செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காகக் காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?
* ராஜீவ் சென்னை மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்கு உள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷ புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?
* அந்தப் பல்கேரியர்கள் மற்றும் அந்த இரண்டு அயல்நாட்டுப் பெண் பத்திரிகையாளர்கள் யார்? அவர்கள் எங்குச் சென்றார்கள்?
* அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் தா.பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் ‘அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது’ என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயல்கிறார்கள், ஏன்?
ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட எழுவர்
* மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ-வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?
* தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, `பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கைக் கொன்றது சி.ஐ.ஏ-தான்’ என்றார், ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை அப்படிச் சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?
* 1991-ம் ஆண்டு ஜூலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான், `எல்.டி.டி.ஈ-யைத் தவிர, வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டுச் சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள்’ என்றார். உள்துறை அமைச்சர் அப்படிச் சொல்ல காரணம் என்ன என்பதை விசேஷப் புலனாய்வுத் துறை ஏன் விசாரிக்கவில்லை?
* வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அரசை, கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவுக்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ-வுக்குப் பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?
* பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், `ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று சந்திரசேகரிடம் தெரிவித்தார். அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல் என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?
* மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்துக்கு வந்தார். குறிப்பாக, அவருடைய குடும்பத்தினரும் அங்கிருந்தனர். மரகதம் சந்திரசேகரின் மருமகள் வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும், அவரை ஏன் விசாரிக்கவில்லை? அவரது குடும்பத்தினரையும் விசாரிக்காதது ஏன்?
* சிவராசனும், தாணுவும் ராஜீவ் வளையத்தில் செல்ல யார் உதவினார்கள் என்பது பற்றியும் இதுவரை தெரியவில்லை.
* சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள்தாம். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?
* விடுதலைப்புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப்படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். `வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள்’ என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.
* காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்டபோது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?
* புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?
* பொட்டுவும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது, ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக் கூடாது?
* பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தைச் செய்திருக்கக் கூடாது?
* சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சந்திரா சுவாமி, சுப்பிரமணியன் சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி ஆகியோரையும் ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் கூறியதே? விசாரணை நடைபெற்றதா? அதன் முடிவு என்ன?
* அரசாங்கமே ஏதும் ஒரு முடிவுக்கு வராதபோது சுப்பிரமணியன் சுவாமி மட்டும் விடுதலைப்புலிகள்தான் ராஜீவைக் கொன்றார்கள் எனக் கூறியதன் மர்மம் என்ன? பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு கொலைப் பின்னணியை விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்ற ஒற்றைக் கோணத்தில் மட்டும் நடத்த வற்புறுத்திய கார்த்திகேயனின் நோக்கம் என்ன?
* சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன், `இந்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த எம்.கே.நாராயணன் ராஜீவ் கொல்லப்பட்ட அந்த இடத்தில் பிடிக்கப்பட்ட வீடியோ டேப்பைத் தராமல் மறைக்கிறார்’ என்ற பகிரங்கக் குற்றச்சாட்டுக்குப் பதில் என்ன?
* திருச்சி வேலுச்சாமி கூற்றுபடி, `ராஜீவ் படுகொலைக்கு ஒரு சிலநிமிடங்களுக்கு முன்பே… ராஜீவ் கொலை செய்யப்பட்டார்’ என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதைப் பற்றி ஏன் இதுவரை விசாரிக்கவில்லை.
* ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் அரசாங்கத்துக்குக் கொடுத்த முக்கியக் கோப்புகள் (File No. 1/12014/5/91-IAS/DIII) எங்கே? சந்திராசாமியின் நெருங்கிய நண்பரும் அன்றைய பிரதம மந்திரியுமான நரசிம்ம ராவ் அந்த முக்கியக் கோப்புகளை அழித்ததின் மர்மம் என்ன? எந்த முக்கிய நாடுகளையும், நபரையும் காப்பதற்காக அந்தக் கோப்புகள் அழிக்கப்பட்டது?
* வாழப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால், மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று, ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தியது உண்மையா?
* மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில், இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக் கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக் கூடாது?
* விமான நிலையத்தில் ராஜீவைச் சந்தித்தார், கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன? ‘ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை’ என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால், ஏன் அவரை பிரபாகரன் கொலைசெய்ய வேண்டும்?
* இந்தியா மற்றும் தமிழகத்தில்தான் தனக்கு அனுதாபமும் ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கிற தவற்றைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டுத் தடை செய்யப்படுகிற அளவுக்கான பழிச்செயலையா பிரபாகரன் செய்தார்?
* ஶ்ரீபெரும்புதூரில் லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனித வெடிகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனைப் பயன்படுத்திதான் தனு உள்ளே வந்தார். இறந்துபோன ஹரிபாபு குற்றவாளி என்றால், லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? இதன் சம்பந்தப்பட்டவர்கள்மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?
ராஜீவுடன் தனு, சுபா, சிவராசன்,
* தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர், லதா பிரியகுமார் என்று சொல்லப்பட்டது. குறிப்பாக, பெண்கள் பகுதிக்கு அழைத்துவந்து, லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர்மீது ஏன் குற்றம் சுமத்தப்படவில்லை?
* ராஜீவின் பயணத்திட்டத்தைத் தீட்டிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கு இணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூருவில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?
* வெளிநாட்டு உளவு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சங்கேத மொழியில், `சந்திராசாமி மற்றும் சுப்பிரமணியன் சுவாமியிடம் ராஜீவ் கொலை பற்றி நடத்திய உரையாடல்’ என்று பதிவுசெய்து வைத்திருந்த முக்கிய ஆதாரம் ஒன்றை பிரதமர் அலுவலக உயர் அதிகாரி தொலைத்துவிட்டதாகக் கூறுவது எப்படி?
* தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, `அந்த இடத்தில் கூட்டம் வேண்டாம்’ என்று மறுத்தபோதும், டெல்லி மேலிடத்தில் இருந்த மார்க்ரெட் ஆல்வா, `அங்குதான் நடத்தியாக வேண்டும்’ எனக் கூறியது உண்மையா என்று விசாரிக்கப்பட்டதா?
* `பெல்ட் பாம் (வெடிகுண்டு) தயாரிக்கப்பட்டது எங்கே, யார் தயாரித்தது என்று இதுவரையில் விசாரிக்கவே இல்லை’ எனச் சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் தெரிவித்திருக்க, வெடிகுண்டுக்குப் பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகச் சொல்லி பேரறிவாளனுக்குத் தூக்குத்தண்டனை அறிவித்து 22 ஆண்டுகள் சிறையில் அடைத்திருப்பது எதனால்?
* ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக விடை தெரியாத கேள்விகள் இதுபோன்று பல இருக்க… காவல் துறை அதிகாரிகளின் விசாரணையில் ஒப்புக்கொண்டதாகச் சொல்லி ஒருவருக்குத் தூக்குத்தண்டனை வழங்குவது உலகில் எந்த நாடுகளின் நீதித்துறையும் பின்பற்றாத ஒரு நடைமுறையை இந்தியாவில் பின்பற்றுவது நியாயத்துக்கும், நேர்மைக்கும் உகந்ததா?
இந்த வினாக்களை எல்லாம் கவனத்தில்கொண்டு உண்மையை அறிய முற்பட்டார்களா என்பதுதான் நமது கேள்விக்குறி. இதற்கு இப்போதாவது விடை காண்பார்களா?” என்றார், மிகத் தெளிவாக.
விகடன் தளத்தில் வெளியான இந்த கட்டுரையை நீங்கள் இங்கும் படிக்கலாம்.