Mai 4, 2024

சுமந்திரனுக்காக குத்திமுறியும் வித்தியாதரனை எச்சரித்த சிறிதரன்!

இன்று நடைபெற்ற யாழ் மாநகரசபையின் மேயர் தேர்தல் தொடர்பில் சுமந்திரன் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பில் யாழில் உள்ள முக்கிய ஊடகம் ஒன்று முதல் முதலாக முக்கிய செய்தியாக அதனை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் சில தகவல்கள் தெரியவருவதாவது,

குறிப்பாக யாழ் மாநகரசபையில் தோல்விக்கு திரு மாவை சேனாதிராஜாவே காரணம் என சுமந்திரன் கடிதம் எழுதியதுடன் , அக்கடிதத்தில் சிறிதரன் மற்றும் சத்தியலிங்கம் போன்றோர் அதேநிலைப்பாட்டில் இருந்ததாகவும் அவர் அந்த கடிதத்தில் கூறியிருந்தாக குறிப்பிடப்படுகின்றது.

இதனை யாழில் இருக்ககூடிய ஊடகம் ஒன்று செய்தியாக பிரசுரித்தது. அச்செய்தியை பார்த்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், உடனடியாக குறித்த ஊடகத்தின் முக்கியஸ்தரான வித்தியாதரனை அழைப்பில் எடுத்து அவரிடம் கடுமையான வாய்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இப்படியான செயல்பாட்டினை தாம் செய்யவில்லை என்றும், சத்தியலிங்கம் கடிதம் ஊடாகவே ஆர்னோல்ட் அவர்களை மேயர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் கோரி இருந்ததுடன், தானும் நேற்று முன் திடம் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆர்னோல்டை நிறுத்துவதற்கு தீர்மானித்திருந்ததாகவும் சிறிதரன் கூறியுள்ளார்.

இந்தநிலையில் சுமந்திரனுக்காக ஒட்டுமொத்த தமிழர்களுடைய செயல்பாடுகளையும் பிழையாக வழிநடத்துவதை நிறுத்துமாறு கூறியதுடன் ஒட்டுமொத்த தமிழினத்தையும் வீதிக்கு கொண்டுவரும் செயல்பாடுகளையும் நிறுத்துமாறு வித்தியாதரனை சிறிதரன் எச்சரித்ததாகவும் சிறிதரனின் முக்கியஸ்தர் ஒருவர் இந்த தகவலை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.