April 28, 2024

பிரபல நடிகர் குறித்து இலங்கை அரசில் வாதியின் பகீர் தகவல்

ரஜினி நேரடி அரசியலை கைவிட்ட நிகழ்வு, தமிழகம் தப்பி பிழைத்த, மிக நல்ல ஒரு சம்பவம் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்..

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாடு, பல வட இந்திய மாநிலங்களை விட முன்னேறிய ஒரு மாநிலம்.

வட இந்தியாவில், டெல்லி, மும்பாய், கொல்கத்தா, சண்டிகர், அஹமதாபாத் ஆகிய மாநகரங்களை சுற்றிய பகுதிகளில் மட்டுமே “முன்னேற்றம்” தெரியும்.

வட இந்தியாவில், உள்ளூரில், கிராமிய நாட்டு புறங்களில், “பின்னேற்றம்” கண்கூடாக தெரியும்.

தமிழ்நாட்டின் இந்த “ஒப்பீட்டளவிலான முன்னேறிய” நிலைமைக்கு காரணம் இம்மாநிலத்தையும், புதுச்சேரியையும் தேசிய கட்சிகள் அல்லாமல், “திராவிட” கட்சிகள் பல பத்தாண்டுகளாக ஆண்டு வருவதே காரணம்.

திராவிட இயக்க அணியின் மூலக்கொள்கை “சமூக நீதி” என்பதாகும். இது நீதிக்கட்சியிலிருந்து ஆரம்பமாகி பெரியார், அண்ணா ஆகிய பெருந்தலைவர்களால் செதுக்கப்பட்டதாகும். இதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிநாதமாக விளங்குகிறது.

இந்த உண்மையை ஆய்வுரீதியாக ஆராய்ந்து பார்த்தால்தான் விளங்கும்.

திமுக, அஇஅதிமுக ஆகிய கட்சிகளின், அரசியல்வாதிகளின் அலங்கோலங்களுக்கு அப்பால் இந்த உண்மை இருக்கிறது.

வட இந்திய கட்சிகளின், அரசியலர்களின் “படா” அலங்கோலங்கள் பற்றி தெரியாதவர்கள்தான், அவசரப்பட்டு, திராவிட கட்சிகளை குறை கூறுவார்கள்.

திராவிட கட்சிகளில் தவறு, பிழை, குற்றம் கணிசமாக இருக்கின்றன. ஆனால் வட இந்திய மாநிலங்களை ஆளும் கட்சிகளின் கட்சிகளுடன் ஒப்பிடும் போது இவை மேல். இதுதான் உண்மை.

கல்வி, சுகாதாரம், ஜாதீயம்-பெண்ணடிமை ஒழிப்பு, பின்தங்கியோருக்கான கல்வி, தொழில், அரசியல் துறை ஒதுக்கீடுகள், கைத்தொழில், வர்த்தகம், கலை, விளையாட்டு, போக்குவரத்து, தகவல் தொடர்பு… என்ற பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது.

திராவிட கட்சிகளின் தவறுகள் இன்னமும் திருத்தப்பட்டு அவற்றுக்கு உள்ளேயே இருந்து உருவாகும் புதிய அமைப்புகள்தான் தமிழகத்தை இன்னமும் சிறந்த இலக்கை நோக்கி கொண்டு செல்ல முடியுமே தவிர, “திராவிட” கட்சிகளுக்கு மாற்று “தேசிய” கட்சிகள் அல்ல.

இந்த பின்னணியில் பார்த்தால் குறுக்கு வழியில் தேசிய கட்சிகளை “ஆன்மீகம்” என்ற பெயர் சூட்டி குறுக்கு வழியில் சிம்மாசனத்தில் உட்கார வைக்க முயன்ற, நடிகர் ரஜினி காந்த் நேரடி அரசியலை கைவிட்டமை, தமிழகத்தில் இன்று நிகழ்ந்த மிக நல்ல ஒரு சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.