Mai 5, 2024

சூர்யாவின் சூரரைப் போற்றுக்கு கிடைத்த பெரிய கவுரவம்: அது என்ன தெரியுமா?

 

சூர்யாவின் சூரரைப் போற்று படம் கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிடப்படவிருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த சூரரைப் போற்று படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக கடந்த மாதம் 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் தியேட்டர்களில் வெளியிட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

படத்தை பார்த்த அனைவரும் சூர்யாவின் நடிப்பை பாராட்டினார்கள். சூர்யா அந்த படத்தில் நடிக்கவில்லை மாறாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் சூரரைப் போற்று படத்திற்கு புது கவுரவம் கிடைத்துள்ளது.

அடுத்த மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருக்கும் 78வது கோல்டன் குளோப் விருது விழாவில் சூரரைப் போற்று படத்தை திரையிட உள்ளனர். இந்த தகவலை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவன டைரக்டர் ராஜசேகர் பாண்டியன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ராஜசேகர் பாண்டியனின் ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏர் டெக்கன் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படம் தான் சூரரைப் போற்று. படத்தை பார்த்த கோபிநாத்தின் நண்பர்கள், அவருக்கு தெரிந்தவர்கள் இது அவரின் வாழ்க்கை வரலாறு இல்லை என்றார்கள்.

மேலும் கோபிநாத்தின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை படித்தவர்களும் சூரரைப் போற்று அவர் கதை இல்லை என்றனர். இதை பார்த்த கோபிநாத்தோ, படத்திற்காக பல மாற்றங்கள் செய்துள்ளனர். ஆனால் சாதாரண ஆளின் கனவும் நிஜமாகும் என்கிற மெசேஜை சரியான முறையில் சொல்லியுள்ளனர் என்று விளக்கம் அளித்து ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யா மட்டும் அல்ல அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோரின் நடிப்பு குறித்தும் ரசிகர்கள் பெருமையாக பேசினார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை பெரிய பலமாக அமைந்தது.