Mai 6, 2024

வட்டுவாகலை திட்டமிட்டு சுவீகரிக்க சதி:ரவிகரன்!

 முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான பூர்வீக காணிகளை கோத்தாபாய கடற்படைமுகாம் கடற்படையினர் அபகரித்துள்ளனர் 

இந்நிலையில் இக் காணிகளை விடுவிக்குமாறுகோரி, காணிகளுக்குரிய தமிழ் மக்கள் பலதடவைகள் போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

ஆனாலும் அக்காணிகளை மக்களுக்கு விடுவித்து வழங்கும் நோக்கம் கடற்படைக்கோ, ஏனைய அரச திணைக்களங்களுக்கோ இல்லை எனவும், மாறாக தமிழ் மக்களின் காணிகளை எப்படியாவது அபகரித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவர்கள் செயற்படுவதாகவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன்  குற்றம்சாட்டியுள்ளார். 

கோத்தாபாய கடற்படைமுகாமிற்காக தமது காணிகளை வழங்க சில காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அண்மையில் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் க.விமலநாதன் கருத்துத் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் அக்கரை என அழைக்கப்படும் பகுதியிலே 617ஏக்கர் காணிகளை இலங்கை அரசாங்கமானது கடற்படைத்தளத்திற்காக அபகரித்துள்ளது. 

அதனைத்தொடர்ந்து எமது மக்கள் தமது இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்டபோது மக்களுக்குரிய அந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டு, அங்கு கோத்தாபாய கடற்படைமுகாம் என்ற பெயரிலே பாரிய கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு இதிலே தனியார் காணிகளாக 379ஏக்கர் 02ரூட் 04பேச் காணிகளையும், மக்களுக்கு ஏற்கனவே அரசதிணைக்களத்தால்  வழங்கப்பட்டகாணிகளாக 291ஏக்கர் 01ரூட் 06பேச் காணிகளும், மொத்தமாக 670ஏக்கர் 03ரூட் 10பேச் காணியில் 617ஏக்கர் காணிகளை இந்தக் கடற்படைத்தளத்திற்காக அபகரித்து பாரிய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக்காணிகளில் எமது மக்கள்பல்வேறு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்துடன், இந்த காணிகளுக்கு அருகாமையில் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தினைக் கொண்டுசெல்லக்கூடியவகையில் பல கரவலைப்பாடுகளும் காணப்படுகின்றன. அதேவேளை எமது மக்கள் நந்திக்கடல், வடக்காற்றில் மீன்பிடித்தொழிலின் ஊடாக நிறைவான வருமானத்தினைப் பெற்றுவந்தனர். ஆனால் தற்போது அங்கு மீன்பிடியில் ஈடுபட்டால், தாம்  கடற்படையால்  அச்சுறுத்தப்பட்டு விரட்டப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறாக எமது மக்களின் வருவாய்கள் அனைத்தையும் முடக்குகின்ற வகையிலே ஓர் கடற்படைத்தளம் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக்காணிகளை விடுவிக்குமாறு கோரி, காணிகளுக்குரிய எமது மக்கள் பலதடவைகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

குறிப்பாக ஒருமுறை அந்த மக்களின் அறிவித்தலுக்கு ஏற்ப, கடந்த 2018.02.22 அன்று நாமும் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோம். அதற்காக போலீசாரால் கைதுசெய்யப்பட்டுமிருந்தோம். தற்போதும் அதுதொடர்பிலான வழக்குவிசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றன. 

இவ்வாறு நாம் எமது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி, ஜனநாயகவழி போராட்டங்களில் ஈடுபடும்போது, எம்மை அடக்கி ஒடுக்கும்விதமாகவே இவர்களின்செயற்பாடுகள் இருக்கின்றன. 

ஆனால் இந்தக் காணிகளால் தொடர்சியாக பல்வேறுவழிகளிலும் பயன்பெற்ற பெரும்பாலான மக்களுக்கு தமது காணிகளை எவருக்கும் விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை. தமது பூர்வீக காணிகளே தமக்கு வேண்டும் என்ற நோக்குடன் தமது காணிகளின் விடுவிப்பினை அவர்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

மேலும்  கடற்படைக்கோ, இந்த விடயத்தோடுதொடர்புடைய ஏனைய அரச திணைக்களங்களுக்கோ இக்காணிகளை மக்களுக்கு விடுவித்து வழங்கும் நோக்கம் இல்லை. மாறாக மக்களின் இந்தக்காணிகளை எப்படியாவது அபகரித்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவர்கள் செயற்பட்டுவருகின்றனர். 

எமது மக்களுடைய பூர்வீகக் காணிகள் அவர்களிடமே கையளிக்கப்படவேண்டும். அதற்கு அனைத்துத் தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert