Mai 2, 2024

கொரோனாவிலிருந்து அரசு தம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர் என்கிறார் இம்ரான் மஹ்ரூப் எம்.பி

கொரோனாவிலிருந்து அரசு மக்களைப் பாதுகாக்கும் என்ற விடயத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.  இதனால் தாமே சில முடிவுகளை எடுத்து வருகின்றனர் என திருகோணமலை மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். வியாழக்கிழமை (19) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கொரோனா நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகின்றது. நாளாந்தம் தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கையும் மரணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் வைத்திய வசதிக்காக அல்லல் படுகின்றனர்.

இதனைக் கவனத்தில் கொண்டு வைத்தியர்களும் ஏனைய சுகாதாரப் பகுதியினரும் சில நாட்களுக்காவது நாடு முடக்கப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றையும் கொரோனா மரணங்களையும் குறைக்க முடியும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

அரசு மக்களைப் பாதுகாக்கும் விடயத்தில் மிகவும் பலவீனமாக உள்ளது என்பதை உணர்ந்த மக்கள், அரசில் நம்பிக்கை இழந்து விட்டனர். இதனால் ஆங்காங்கே பிரதேச ரீதியாக மக்கள் ஒன்றிணைந்து தத்தமது பகுதிகளில் சுய முடக்கத்தை பிரகடனப்படுத்தி வருகின்றனர்.