Mai 1, 2024

பணிக்கு திரும்ப தயாராகுங்கள் – அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மஹிந்த

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணியாற்றுவதற்கு தயாராகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரிடம் தெரிவித்தார்.

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் இருபத்து நான்கு ஆண்டு காலமாக காணப்படுகின்ற போதிலும் இதுவரை ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என்றும்,

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து தெளிவான புரிந்துணர்வை கொண்டிருப்பதால் ஒரே தடவையில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாவிடினும், சம்பள முரண்பாட்டை குறைப்பதற்கு விளக்க அறிக்கையின்படி கொள்கை தீர்மானமொன்றை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது வேண்டுகோள் விடுத்தனர்.