Mai 10, 2024

யாழில் மேலும் 400 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன – க.மகேசன்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதனார்மட சந்தை கொரோனா பரவலினால் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதிக்குப் பின்னர் 59 கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 31 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 18 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருதனார்மட சந்தை கோரோனா வைரஸ் பரவலை அடுத்து மேலும் 400 குடும்பங்கள் கடந்த மூன்று நாட்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 144 குடும்பங்கள் இதுவரையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை மருதனார்மட சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வியாபார நிலையங்கள் என்பன மறுஅறிவித்தல் வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.