Mai 10, 2024

பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து கவனம் – கல்வி அமைச்சர்!

பாடத்திட்டங்களை நவீன முறைக்கேற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சமூகத்திற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் இந்த விடயம் தொடர்பாக சகல தரப்பினரிடமும் கருத்துக்கள் பெறப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி நிறுவனங்களில் இளம் சமூகத்தினருக்கு வழங்கப்படும் கல்விக்கும், தொழில் வாய்ப்புக்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் குறைவு என்றும் ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

ஆகையால் இதனை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் சங்கம் ஆகியோருடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களைப் பெற்று பாடத்திட்டங்களை முழுமையாக நவீன மயப்படுத்தவுள்ளதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.