Mai 11, 2024

அவுஸ்ரேலியாவுடனான ரி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

நடராஜன், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தின் துணையோடு அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ரி20 போட்டியை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது ரி-20 போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி, அவுஸ்ரேலியாவைத் துடுப்பெடுத்தாட அழைத்தது. ஆரோன் ஃபின்ச் காயத்தினால் விளையாடாத நிலையில் மத்யூ வேட் அவுஸ்ரேலியாவுக்கு தலைமை தாங்கினார்.

மத்யூ வேட் – 58, ஸ்மித் – 46, ஹென்றிக்ஸ் – 26, மக்ஸ்வெல் – 22 ஓட்டங்களைப் பெற, 20 ஓவர்களில் 194 ஓட்டங்களைச் சேர்த்தது அவுஸ்ரேலியா. பந்துவீச்சில் நடராஜன் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். தாகூரும் செகெலும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 19 ஓவர்கள் 4 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஷிகர் தவான் 52 ஓட்டங்களையும், விராட் ஹோலி 40, கே.எல்.ராகுல் 30 ஓட்டங்களையும்பெற, இறுதி நேரத்தில் களத்தில் இறங்கி அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா, 22 பந்துகளில் 42 ஓட்டங்களைக் குவித்து இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக அவரே தெரிவானார்.

தொடரின் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது.

மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி வரும் 8ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ளது.