Mai 10, 2024

விளையாட்டில் எந்த அரசியல் தலையீடும் இல்லை – நாமல்!

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் விளையாட்டு துறைக்குள் அரசியல் தலையீடு இல்லை என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (சனிக்கிழமை) கருத்து வெளியிட்ட அவர் விளையாட்டு அமைப்புகளின் நிதிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த மட்டுமே அரசாங்கம் ஈடுபடும் என கூறினார்.

இருப்பினும் இலங்கை கிரிக்கெட் சபை உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகள் அரசியல் தலையீடு இல்லாமல் செயற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை விளையாட்டு தொடர்பான புதிய சட்டம் தேவை என்றும், புதிய விளையாட்டுச் சட்டத்தை உருவாக்கும் செயன்முறை தற்போது நடைபெற்று வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு லங்கா பிரிமியர் லீக் போட்டி தொடருக்கு விளையாட்டு அமைச்சினால் எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிட்ட அமைச்சர் இலங்கை கிரிக்கெட் சபையினால் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.