Mai 9, 2024

சிறு மற்றும் மத்திய தொழிலாளர்களை பலப்படுத்துவதே எமது நோக்கம்- நாமல்!

நாட்டில் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க சிறு மற்றும் மத்திய தொழிலாளர்களை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும்  என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த அரசாங்கம்  வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க தவறிவிட்டது.

இதனால்தான் இன்று பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 20 வீதமாகும்.

இந்த பிரச்சினையை தற்காலிக அரசியல் நியமனங்களின் ஊடாக ஒருபோதும்  தீர்க்க முடியாது.

ஆகவே, இவ்விடயத்தில் நீண்டகால தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும். அதில் சர்வதேச நிறுவனங்களை அனுமதித்தாலும் கூட தேசிய ரீதியிலான பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.

அதனைதான் தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஹம்பாந்தோட்டையில் 300மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு உருவாக்கப்பட்டுள்ளது.இதனூடாக  2ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

அந்தவகையில் சிறு மற்றும் மத்திய தொழிலாளர்களை பலப்படுத்துவதே எமது முக்கிய நோக்கமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.