Mai 11, 2024

புரவி புயல் : 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான புரவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வங்கக்கடலில் உருவான புரவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

திருகோணமலைக்கு 300 கி.மீ. கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும்  மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் 6 மணி நேரத்தில் மேலும் வலுவடையும். இன்று மாலை அல்லது இரவில் திருகோணமலை அருகே கரையை கடக்கிறது.

கரையை கடந்த பின் புரவி புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வருகிறது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 95 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் அதிகாலை குமரி-பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புரவி புயல் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.