Mai 11, 2024

புலம்பெயர் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இலங்கையில் உயிர் ஆபத்து! பிரித்தானிய தீர்ப்பாயம் வெளியிட்ட மிக முக்கிய தீர்ப்பு

பிரித்தானியாவில் உள்ள இலங்கை பிரஜைகள், குறிப்பாக அரசியல் தஞ்சம் கோரியுள்ள தமிழர்கள், இங்கு இருந்தவாறு இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான (அல்லது அவ்வாறு கருதப்படக்கூடிய) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபவதன் விளைவாக, அவர்கள் இலங்கை திரும்பும் போது இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை மற்றும் இதர துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆபத்து தொடர்பாக ஆராயப்பட்ட KK & RS (Sri Lanka) என்னும் முக்கிய வழக்கில், குடிவரவு மற்றும் புகலிட தஞ்ச விசாரணை தீர்ப்பாயத்தின் மேல் தீர்ப்பாயம் (IAC – Upper Tribunal) தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு சாதகமான மிக முக்கிய தீர்ப்பையும், புதிய நாடுசார்ந்த புதிய வழிகாட்டுதலை (New Country Guidance) வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசியல் தஞ்ச கோரிக்கையை தீர்மானிக்கும் போது, இந்த வழிகாட்டுதலையே பிரித்தானிய உள்விவகார அமைச்சும், பிரித்தானிய நீதிமன்றங்களும் இனிவரும் காலங்களில் பின்பற்ற வேண்டும்.

இலங்கையில் சுமுக நிலை திரும்பிவிட்டதாகவும், கடத்தல் சித்திரவதை தொடர்வதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் பிரித்தானிய தூதரகமும், பிரித்தானிய குடிவரவு அமைச்சும் வெளியிட்டிருந்த அறிக்கையை (The Home Office Country Information and Guidance – CIG) தொடர்ந்து, அகதி கோரிக்கைகள் நிராகரிக்கபட்டு வந்த நிலையில், இலங்கை அரசியல் தஞ்ச கோரிக்கை பற்றிய விதிமுறைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கபட்டது.

அதன் அடிப்படையில் KK மற்றும் RS ஆகிய இரு தமிழர்களின் நிராகரிக்கபட்ட அரசியல் தஞ்ச கோரிக்கைகள் உதாரண வழக்குகளாக தெரிவு செய்யப்பட்டன. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 7 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த வழக்கு, 3 மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதிகளால் விசாரிக்கபட்டது.

கலாநிதி கிறிஸ் சிமித், கலாநிதி சுதாகரன் நடராஐா, பேராசிரியர் குணரத்ன ஆகிய நிபுணர்கள் மற்றும் நாடுகடந்த அரசின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட்ட பலர் சாட்சியம் வழங்கியிருந்தனர். மிக நீண்ட காலமாக ஆராயப்பட்டு, இறுதியில் நேற்றைய தினம், 186 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

ஐிஜே மற்றும் ஏனையவர்கள் (உள்நாட்டுப் போருக்குப் பின் : நாடுதிரும்புவோர்) இலங்கை (CG (2013) UKUT 00319 (IAC) என்ற வழக்கில் 2013 இல் கொண்டுவரப்பட்ட நாடுசார் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இதுவரை பிரித்தானியாவில் இலங்கை பிரஜைகளின் அரசியல் தஞ்ச கோரிக்கைகள் தீர்மானிக்கபட்டு வந்தன.

இந்தத் புதிய தீர்ப்பு, ஏற்கனவே இருந்த வழிகாட்டுதலை மறுவடிவமைப்பு செய்கின்றது. அத்துடன் இலங்கையில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் மற்றும் தனிநாட்டினை ஆதரிக்கும் செயற்பாடுகளிலும் நினைவு நிகழ்வுகளில் ஈடுபடுவோர் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய கண்ணோட்டத்தினையும் ஆழமாக ஆராய்ந்து, அவற்றால் அதிகரித்துள்ள ஆபத்தையும் இந்த தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது.

வழங்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் தற்போது சர்வாதிகாரப் போக்குடைய ஆட்சியினையே நடாத்துகின்றது என்பதை மேல் தீர்ப்பாயம் உறுதிசெய்துள்ளது.

இலங்கையினுள் பிரிவினைவாத இயக்கம் எதுவும் மீண்டும் எழுச்சி பெறுவதை தடுப்பதில் அது பிரதான கவனம் செலுத்துகின்றது.

விடுதலைப் புலிகளின் வன்முறைரீதியிலான நடவடிக்கைகளுக்கும் மற்றும் வன்முறையற்ற அரசியல் ஆதரவு நடவடிக்கைகளுக்கும், அது மட்டுமல்லாது தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கும் மற்றும் இலங்கையில் பயங்கரவாத அமைப்புக்களாக தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கும் இடையில் இலங்கை அரசாங்கம் எந்தவித வேறுபாட்டினையும் கண்டுகொள்ளவில்லை என நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது.

இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழர்கள் தொர்பாக பொதுவில் எதிர்மறை மனநிலையினைக் கொண்டிருப்பதால், தடைவிதித்தல் என்பது ஒப்பீட்டளவில் முக்கிய ஆபத்துக் காரணியாக கருதப்பட்டாலும் இலங்கையில் ஒருவர் துன்புறுத்தலுக்கு முகம்கொடுப்பாரா என்பதை அது மட்டும் தீர்மானிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), உலகத் தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) உள்ளிட்ட பிரித்தானியாவில் இயங்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னணி அமைப்புக்களாக இலங்கை அரசாங்கத்தினால் கருதப்படுவதுடன் அவை இலங்கை அரசாங்கத்தினால் விரோத மனப்பாங்குடனேயே பார்க்கப்படுகின்றன.

தமிழர் பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படுவோரை இனங்கண்டுகொள்ளும் நோக்குடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பிரித்தானியாவில் தமது புலனாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக, எத்தகைய அரசியல் செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து, அவர்கள் நாடு திரும்பும்போது கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படக்கூடிய ஆபத்திற்குள் தள்ளும் என்பதை மேல் தீர்ப்பாயம் முக்கியமாக இனங்கண்டு வரையறை செய்துள்ளது.

மேல் குறிப்பிடப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் ஆழமான ஈடுபாடு கொண்டிருப்பதை விட, கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளல், விடுதலைப்புலிகளின் (LTTE) சின்னத்தினை கொண்டுள்ள கொடிகளை அல்லது பதாகைகளை ஏந்துதல், நினைவு நிகழ்வுகளில் கலந்துகொள்ளல், பயனுள்ளள நிதி சேகரிப்பில் ஈடுபடுதல், சமூக வலைத்தள ஊடகங்களில் பிரசன்னமாதல், மனுக்களில் கையெழுத்திடல் போன்றன அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகள் என இலங்கை அரசாங்கத்தினால் கருதப்படுகின்றது.

உள்விவகார அலுவலகம் அடிக்கடி பரிந்துரைத்த நிலைப்பாட்டுக்கு மாறாக, ஓர் அமைப்பில் தான் உத்தியோகபூர்வமான நிலையில் இருப்பதாகவோ அல்லது அவர்களுடைய செயற்பாடு பிரபல்யமானது என்றோ காட்டி ஒருவர் தான் தமிழர் பிரிவினைவாதத்தில் ‚முக்கிய பங்கு வகித்தேன் என்பதை வெளிப்படுத்தத் தேவையில்லை.

ஆனால் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குட்படுகின்ற செயற்பாடுகளை அடையாளப்படுத்தும் அணுகுமுறை கருத்திலெடுக்கப்படவேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. நாடுசார் வழிகாட்டுதல் தொடர்பான வரையறையில் அகதிகள் சட்டத்தின் பரந்துபட்ட விதிமுறைகளை பிரயோகிக்கவேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு முக்கியமாக வலியுறுத்துகின்றது.