April 28, 2024

ஸ்ரீதரன் எம்.பியால் சபையில் ஏற்பட்ட கூச்சலும் குழப்பமும்!

இலங்கையில் தமிழ் சிறுவர்களுக்கு உயிர்வாழும் உரிமைக்கூட பறிக்கப்பட்டுள்ளதாகவும், இறுதி யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சபைபில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை 12 வயதுடைய பாலச்சந்திரனை பிரபாகரனின் இளைய மகன் என்ற ஒரு காரணத்தினாலேயே அரசாங்கம் குறித்த சிறுவனை படுகொலை செய்ததாகவும் எம்.பி.எஸ்.ஸ்ரீதரன் சபையில் குற்றம்சாட்டிய நிலையில் அரச தரப்பினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சபையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.எஸ்.ஸ்ரீதரன் இதனை பற்றி பேசியுள்ளார்.

மேலும் அவர் சபையில் தெரிவித்தது,

சிறுவர் தினம் இம்மாதம் முதலாம் திகதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினமே பாலச்சந்திரனின் 25 ஆவது அகவை நாளாகும் என அவர் தெரிவித்தார்.

இசைப்பிரியா, பாலச்சந்திரனின் படுகொலைகள் இனவாத அரசாங்கத்தின் கோரமுகத்தை உலகுக்கு காட்டிய பெரும் யுத்தக் குற்றச்சாட்டாக இடம்பெற்றிருந்தன.

12 வயதுடைய பாலச்சந்திரனை பிரபாகரனின் இளைய மகன் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே இலங்கை அரசாங்கம் படுகொலை செய்ததாகவும், இந்த படுகொலை உலக தமிழர்களின் உள்ளங்களில் ஆறாத ரணமாக இன்னும் இருந்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை கடந்த காலங்களில் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட பல்வேறு சம்பவங்களையும் சபையில் ஸ்ரீதரன் பட்டியிலிட்டார்.

எம்.பி. எஸ்.ஸ்ரீதரனின் உரைக்குக் கடுமையான எதிர்ப்புகளை அரச தரப்பு எம்.பிக்கள் சபையில் தெரிவித்தனர். மேலும் கூச்சல், கடும் தர்க்கம் புரிந்தனர்.

இதன்போது ஸ்ரீதரன் சர்வதேசத்தை இலக்கு வைத்து உரையாற்றுகிறார் என அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தினர், மேலும் எம்,பி ஸ்ரீதரன் தெரிவித்தது எல்லாம் கடந்த காலங்களில் இடம்பெற்றவை என சபையில் அரச தரப்பு தெரிவித்தனர்.

இதேவேளை தலதா மாளிகை, சிறிமா போதி உள்ளிட்ட பல இடங்களில் குண்டுகளை வைத்த போது அதில் சிறுவர்கள் பலியாகவில்லையா என சபையில் அரச தரப்புகள் வாதிட்டனர்,

மேலும் நாட்டில் யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறவில்லை. பங்கரவாதிகளுக்கு எதிராகவே இடம்பெற்றதாக அரச தரப்பு உறுப்பினர்கள் சபையில் வாதிட்டனர்.

இதேவேளை எம்,பி ஸ்ரீதரனின் இனவாத கருத்துக்களை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.