April 28, 2024

சீனாவிலிருந்து இறக்குமதியை நிறுத்தி இந்தியா பக்கம் சாயும் சிறிலங்கா! பகிரங்க அறிவித்தல்

நனோ நைற்றிஜன் உரம் இறக்குமதி செய்யவதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சேதன உரத்தின் மாதிரிகளை பரிசோதனைக்கு உற்படுத்தி அவை நிராகரிக்கப்பட்டதன் பின்னரும் கப்பலில் ஏற்கனவே ஏற்றப்பட்ட உரங்கள் இப்போதும் இலங்கையை நோக்கி வருகின்றது.

இந்த நிலையில், இவை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதால் இலங்கைக்குள் பாரிய நெருக்கடி நிலையொன்று ஏற்படும். அதேபோல் மாதிரிகளில் நிராகரிக்கப்பட்ட உரத்தை நாம் பயன்படுத்தவில்லை என்றால் மாற்றீடாக எடுக்கும் வேலைத்திட்டம் என்ன? என்றும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையின் தரத்தை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக பத்திரன(Buththika Pathirana) சரிமாரியான கேள்விகளை தொடுத்தார்.

குறித்த கேள்விகளுக்குப் பதில் வழங்கி பேசிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,

சீனாவில் இருந்து உரம் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இலங்கையின் விளைச்சலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது நைற்றிஜன் உரமாகும்.

இது இலங்கையில் பயன்படுத்தும் உரத்துடன் கலப்பதற்கு (பூஸ்ட்) பயன்படுத்துவது. பெரும்போகத்திற்கு தேவையான சகல உரமும் 10ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை வந்தடையும்.

சீனாவில் இருந்து நைற்றிஜன் உரம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்ட போதிலும் ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய அதனை நிறுத்தியுள்ளோம்.

எனினும் நனோ நைற்றிஜன் உரம் இறக்குமதி செய்யவதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம், ஒரு வேளை கால தாமதமானால் மாற்று வழிகளை கையாள்வோம். எனவே எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றார்.