Mai 3, 2024

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பாம்!

ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் என்பனவற்றை இலங்கையில் கடத்த முயற்சித்த நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணியவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி கேரள கடற்பரப்பில் இலங்கைப் படகு ஒன்றை இந்திய பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியிருந்தனர்.

இந்தப் படகில் 3000 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளும், 5 ஏ. கே47 ரக துப்பாக்கிகளும் மீட்கப்பட்டிருந்தது.

அத்துடன், இந்தப் படகில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். 39 வயதான சுரேஸ் ராஜ் எனப்படும் சின்ன சுரேஸ் மற்றும் 21 வயதான சொளந்தராஜன் எனப்படும் சொளந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சந்தேக நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணியதாக இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களுக்கு இந்தப் போதைப் பொருட்களை பாகிஸ்தானியர் ஒருவர் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுரேஸ் என்ற இலங்கையர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் எனவும் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்று போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆதார் அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.