April 30, 2024

சந்நிதியில் சோறு போட்டவருக்கும் கொரோனா!

 

செல்வச் சந்நிதி ஆலய சந்நிதியான் ஆச்சிரமத்தில் உணவு பரிமாறுபவர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொத்தணி உருவாகக் கூடிய அபாயம் எற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆச்சிரமத்தில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது அன்னதான நிகழ்வு நடாத்தப்பட்டது. இதனால் குறித்த ஆச்சிரமம் மூடப்பட்டதோடு அதில் பணியாற்றிய நபர்களை தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் உணவு பரிமாறிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அன்றைய தினம் ஆச்சிரமத்திற்குச் சென்றவர்கள் தத்தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ அல்லது பொதுச் சுகாதார பரிசோதகரிடமோ தமது தகவல்களை வழங்கி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப்பிரிவினர் கோரியுள்ளனர்.ஆச்சிரமத்திற்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் பதிவு செய்து வைக்கப்படாமையினால் தாமாகவே முன்வந்து பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.