Mai 2, 2024

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச விமானப் பயணம்

டோக்யோவில் நடைபெற்ற 2020 ஒலிம்பிக் தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 48வது இடத்தில் உள்ளது இந்தியா. இதுவரை வேறு எந்த ஒலிம்பிக்கிலும் இந்தியா இவ்வளவு பதக்கங்களை பெற்றதில்லை. ஈட்டி எறிதலில் 23 வயதாகும் இளம் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தடகளத்தில் 120 ஆண்டுகளாக தங்கப் பதக்கத்துக்காக ஏங்கித் தவித்த இந்தியர்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறார் நீரஜ்.

ஆடவர் மல்யுத்தப் போட்டியில் (57கி எடைபிரிவு) ரவி தாஹியாவும், மகளிர் பளு தூக்குதலில் (49 கி எடை பிரிவு) மீராபாய் சானுவும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.

பேட்மிண்டனில் பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் லவ்லினா பர்கொஹெயின், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா மற்றும் ஆடவர் ஹாக்கியில் வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றிருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீரர்களுக்கு இலவச விமான சேவை அளிப்பதாக Go First மற்றும் Star Air ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

GoAir என முன்னர் அறியப்பட்ட Go First விமான நிறுவனம் ஒலிம்பிக்கில் வென்ற வீரர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச டிக்கெட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் 13 நகரங்களை இணைக்கும் உள்ளூர் விமான சேவை நிறுவனமான Star Air, டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் வாழ்நாள் முழுதும் தங்களின் விமானங்களில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது. ஆடவர் ஹாக்கி அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுமே இந்த இலவச சேவையின் கீழ் பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு இலவச பயண சேவை அளிப்பது தங்களின் கவுரவம் என Star Air நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனிடையே இண்டிகோ நிறுவனம் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அடுத்த ஆண்டு வரை தங்களது விமானங்களில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.