Mai 18, 2024

ஒரு லட்சம் இறப்புகளுக்கு அரசைமன்னிப்புக் கோருமாறு கேட்கிறது மரீன் லூ பென்னின் எதிர்க் கட்சி!

 
 

பிரான்ஸில் கொரோனா வைரஸ் மரணங்கள் நேற்று வியாழக்கிழமை யுடன் ஒரு லட்சம் என்ற கணக்கைத் தாண்டிவிட்டதாகப் பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனை ஒட்டி அரசுத் தலைவர் மக்ரோன் தனது ருவீற்றரில் அஞ்சலிக் குறிப்பு ஒன்றைப்பதிவு செய்துள்ளார்.

“ உயிரிழந்தவர்களது குடும்பங்கள், அவர்களின் அன்புக்குரியவர்கள், பெற்றோரை அல்லது தாத்தாக்களை இழந்த பிள்ளைகள், துயரடைந்துள்ளஉடன்பிறப்புகள், உடைந்த மனங்கள், நட்புகள் இவர்கள் அனைவரைப்பற்றியும் எங்களிடம் ஒரு நினைவு இருக்கும்.“

“ இன்று எங்கள் முழுப்பலத்தையும் ஒன்று திரட்டி இந்த சோதனையில் இருந்து வெளியேறுவோமாக இருந்தால் நாங்கள் இவர்களில் எந்த முகத்தையும் எந்தப் பெயரையும் மறவாதிருப்போம் „

இவ்வாறு மக்ரோன் தனது அஞ்சலிக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை-பிரெஞ்சு மக்கள் ஒரு லட்சம் பேரினதும் மரணத்துக்குப் பொறுப்பேற்று அதிபர் மக்ரோன் மன்னிப்புக் கோரவேண்டும் என்று தீவிர வலதுசாரி Rassemblement national கட்சியின் பேச்சாளர் கேட்டிருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கட்சியின் பேச்சாளர் Sébastien Chenu, „வைரஸ் நெருக்கடியை மோசமாகக் கையாண்டதற்காக நாட்டு மக்களிடம் மக்ரோன் மன்னிப்புக் கோர வேண்டும். அது ஒரு குறைந்தபட்ச மன்னிப்பாக இருக்கும்“ என்று தெரிவித்தார்.

 

வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் அதிபர் மக்ரோனுடன் சரிக்குச் சமனாக வெற்றிவாய்ப்பைக் கொண்டுள்ள ஒரே தலைவராக Rassemblement national கட்சியின் தலைவி மரின் லூ பென் விளங்குகின்றார் என்பது குறிப்பிடத் தக்கது.