Mai 9, 2024

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி.யான ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.பாராளுமன்றன் இன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பை வெளியிட்டபோதே இதனை அறிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் கூறுகையில்,

பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற  உறுப்பினராக இருப்பதை இரத்து செய்வதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய  அரசியலமைப்பின் பிரிவு 66 (d) யின்படி, கம்பஹா தேர்தல் மாவட்டத்தைப் பொறுத்தவரை பாராளுமன்ற ஆசனத்துக்கான ஒரு வெற்றிடம்  ஏற்பட்டுள்ளது என்றார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஜனவரி 12 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  தனது பாராளுமன்ற ஆசனத்தை இரத்து செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் குறித்த ரீட் மனுவை கடந்த 5 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி.யான ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று சபையில் அறிவித்தார்.