Mai 8, 2024

புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக இருக்கும் கனடாவில் அசிரியையாக பணியாற்றும் இலங்கை தமிழ்ப்பெண்!

கனடாவில், ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கைத் தமிழரான மீரா பாலா, பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார்.

தமிழ்க் கனேடிய எழுத்தாளரான மீரா, சிறுவர் புத்தகங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார்.

தான் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தபோது, தான் எதிர்கொண்ட போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, சமீபத்தில், Palm Trees Under Snow என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் மீரா.

அந்த புத்தகம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது இலங்கையில் வாழ்ந்த மாயா என்ற சிறுமியைக் குறித்தது அந்த புத்தகம்.

கனடாவுக்கு புலம்பெயரும் மாயாவுக்கு, அங்கும் சவால்கள் காத்திருக்கின்றன. மொழிப் பிரச்சினை பெரும் தடையாக, மாயாவை வம்புக்கிழுக்கிறார்கள் சக மாணவமாணவிகள்.

பனை மரங்கள் சூழ்ந்த இடத்தில், கடல் காற்றை சுவாசித்து வளர்ந்த மாயா, தன் நாடு போரால் சின்னபின்னமாவதைக் கண்ணால் காண்கிறாள். அமைதியும் பாதுகாப்பும் நாடி கனடாவுக்கு புலம்பெயர்கிறது மாயாவின் குடும்பம்.

கனடாவுக்கு வந்தால், அவளால் ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் பேசும் சக மாணவமாணவிகளுடன் உரையாட முடியவில்லை. யாரும் அவளுக்கு நண்பர்களாகவும் முன்வரவில்லை.

புத்தகத்தில் இது மாயாவின் கதையானாலும், உண்மையில் அது மீராவின் கதை! 9 வயதாக இருக்கும்போது கனடாவுக்கு குடிபெயர்ந்த மீரா, தன்னை மற்ற மாணவமாணவிகள் ஒதுக்கிவைப்பதையும் வம்புக்கிழுப்பதையும் அனுபவித்தவர்.

மீரா புலம்பெயர்ந்த 1980களில், ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் கனடாவில் அதிகம் இல்லை. மீராவின் வகுப்பில் படிக்கும் மாணவமாணவிகள் மீராவைப் பார்த்து, ‘உன் நாட்டுக்குத் திரும்பிப்போ’ என கத்தும்போதெல்லாம், என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நிற்பார் மீரா.

ஒரு முறை கண்ணீர் விட்டுக் கதறி, தன் பெற்றோரைப் பார்த்து, நம் நாட்டுக்குப் போவோம் வாருங்கள் என மீரா அழைக்க, இதுதான் நம் புதிய தாய்நாடு, நீ கஷ்டப்பட்டு உழைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிவிட்டிருக்கிறார்கள் அவர்கள்.

அதை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளத் துவங்கிய மீரா, ஆங்கிலம் கற்பதன் மூலம் தைரியத்தை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார்.

அதற்குப் பின் மற்ற மாணவமாணவிகள், உன் நாட்டுக்கு திரும்பிப்போ என கத்தும்போது, நான் போகமாட்டேன், இதுதான் என் புது தாய்நாடு என்று தைரியமாக பதிலளித்திருக்கிறார் மீரா.

தன்னிடம் கத்தியவர்களிடம் பதிலுக்கு ஆங்கிலத்தில் கத்தியபிறகுதான் நிமிர்ந்து நிற்பதாக முதன்முறையாக உணர்ந்துள்ளார் அவர்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றும் மீரா, தான் அனுபவித்த அதே பிரச்சினைகளை இன்றும் அனுபவிக்கும் புலம்பெயர்ந்த சிறுவர் சிறுமியரை தினமும் காண்கிறார்.

என் வகுப்பில் ஏராளம் ஆசிய நாட்டவர்களான மாணவமாணவிகள் இருக்கிறார்கள் என்று கூறும் மீரா, ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக எடுக்கும் மாணவமாணவிகள் மற்றவர்களை விட குறைந்தவர்கள் என யாராவது கூறினால், நான் அவர்களுக்கு என்னுடைய கதையைக் கூறுகிறேன் என்கிறார்.

பாருங்கள், நான் கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது, ஆனால், இப்போது நான் ஒரு ஆசிரியையாக இருக்கிறேன், என்னைப்போலவே நீங்களும் வெற்றிகரமான மாணவர்களாக மாறமுடியும் என்று அவர் அந்த மாணவமாணவிகளை உற்சாகப்படுத்துகிறார்.

ஆசிய மற்றும் பிற சிறுபான்மை சமுதாயத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தகங்கள் பள்ளிகளில் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட மீரா, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட புத்தகங்களை இப்போது எழுதிவருகிறார்.

சமீபத்தில் ஆசியர்களுக்கெதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டதைக் குறித்து கேள்விப்பட்ட மீரா, நாம் இந்த பாகுபாடுகளை அகற்றவேண்டுமானால், சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் என்கிறார்.

வித்தியாசமாக இருப்பது தவறல்ல, நாம் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டு, அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழவேண்டும் என்கிறார் மீரா.