Mai 6, 2024

சுமந்திரனுக்கு எதிராகப் போராட்டம்! கொடும்பாவியும் எரிப்பு!

உள்ளூர் இழுவை மடி தொழிலை தடை செய்யுமாறு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து குருநகரில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அத்தோடு அப்பகுதியில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுவதுடன் அங்கு கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

அதேவேளை குருநகர் கடற்தொழில் சங்க முன்றலில் எம்.ஏ.சுமந்திரனின் உருவப் பொம்மை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நாங்கள் ஒரு படகிற்கு 5000 ரூபா கொடுத்து உள்ளூர் இழுவை மடி தொழில் புரிவதை எம்.ஏ.சுமந்திரன் நிரூபிக்கவேண்டுமென குருநகர் கடற் தொழில் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பின் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் உள்ளூர் இழுவை மடி தொழிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளதோடு அண்மையில் ஒரு போராட்டத்தினையும் முன்னெடுத்திருந்தார் .போராட்டத்தில் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு படகுக்கு 5 ஆயிரம் ரூபா லஞ்சம் கொடுத்து உள்ளூர் இழுவை மடி தொழிலில் ஈடுபடுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு கடற்தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இந்த பதவியை விட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.அவர் எப்போது அரசியலுக்கு வந்தவர் .அவர் எமது வயிற்றில் அடிப்பதற்காக இந்த வேலை செய்கின்றார்;. அவர் நாங்கள் ஒரு படகுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுத்து இழுவை மடி தொழில் புரிவதை நிரூபிக்கட்டும்; என தெரிவித்துள்ளார்.