Mai 6, 2024

குடும்பஸ்தர் அடித்துக் கொலை – சிறிலங்கா இராணுவ அதிகாரி உட்பட மூவர் கைது

பதுளை அசேலாபுர கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் உட்பட மூன்று சந்தேக நபர்களை பதுளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் வீட்டின் மீது கற்களை வீசியதாக கூறப்படும் சந்தேக நபர்களுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மஹாவலி அதிகார சபையின் ஓய்வுபெற்ற கள உத்தியோகத்தர் டி.எம்.சந்திரசேனா (65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் அம்புலன்சில் பதுளை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், எனினும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவ அதிகாரி காயமடைந்ததாகக் கூறி பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டார். மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் குறுகிய காலத்திற்குள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.