Mai 17, 2024

நெடுந்தீவில் பாகிஸ்தான் தூதர்:பொய்யென்கிறார் தவிசாளர்

யாழ் நெடுந்தீவு பகுதிக்கான பாகிஸ்தான் தூதுவரின் விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்திருப்பது போன்று, எமது பிரதேச சபைக்கு எதுவித தொடர்பும் கிடையாது என நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் நல்லதம்பி சசிக்குமார், தெரிவித்துள்ளார்.

முன்பதாக சில தினங்களுக்கு முன்னர் யாழ்.நெடுந்தீவுக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் துாதுவரை அரச சார்பு கட்சி ஒன்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச சபை உறுப்பினர்களுமே வரவேற்றார்கள் என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் விந்தன் நேற்றையதினம் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் பாகிஸ்தான் தூதுவர் தீவகத்தை இலக்கு வைத்து அடிக்கடி விஜயம் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் நெடுந்தீவுக்கு வருகை தந்த பாகிஸ்தான் தூதுவரை பிரதேசசபை வாகனத்தில் அழைத்துச் சென்று நெடுந்தீவை சுற்றி காண்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்  நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் – குறித்த செய்தியில் எதுவித உண்மைத்தன்மையும் இல்லாது ஒரு போலியான தகவலை வெளியிட்டுள்ள விந்தன் கனகரட்ணம் இழந்துவரும் தனது அரசியல் தளத்தை புதுப்பிக்கவும் மக்கள் மத்தியில் காணாமல் போயிருந்த அவரது முகத்தை மீண்டும் காண்பிக்கும் வகையிலுமான அரசியல் நோக்கம் கொண்டதாகவே குறித்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.