Mai 5, 2024

எதிர்ப்புகள் வலுத்த வந்த நிலையில் 800 படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி!

எதிர்ப்புகள் வலுத்த வந்த நிலையில் 800 படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. தமிழர்களின் மன உணர்வை மதித்து இந்த முடிவெடுத்த விஜய்சேதிபதிக்கு நன்றி தெரிவித்து, அவர் மேல் அன்பு கூடுகிறது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் கீரா.

ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று தொடக்கத்தில் இருந்தே தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

படத்தின் டைட்டில் ‘800’ என்று வெளியாகி, விரைவில் படப்பிடிப்பும் தொடங்க இருக்கும் நிலையில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் விஜய்சேதிபதி அப்படத்தில் நடிக்கக்கூடாது என்று வலியுத்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வீரரில் படத்தில் நடிப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்களின் மனதையும் புரிந்துகொண்டு அவர் நடந்தால் அவரின் எதிர்காலத்திற்கு நல்லது’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவும் தெரிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று இப்படி ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்தாலும், நடிகை ராதிகா, நடிகர் அரவிந்தன் சிவஞானம் உள்ளிட்டோர் கலைஞனை கலைஞனாக பார்க்க வேண்டும். அவனை வைத்து அரசியல் செய்யக்கூடாது. நடிக்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறிவருகிறார்கள். விஜய் சேதிபதியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றே பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனும் கூறியிருக்கிறார்.

ஆனாலும் பெரும்பாலான தமிழர்கள் தன்னை நடிக்கக்கூடாது என்றே சொல்லி வருவதால், 800 படத்தில் இருந்து விலகுவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. தனக்கு நெருங்கிய இயக்குநர்களை அழைத்து அவர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆலோசனையின் முடிவில் விஜய்சேதுபதி, 800 படத்தில் இருந்து விலகுவதாக முடிவெடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில்,

’’நடிகர் விஜய் சேதுபதி மீது அன்பும் கூடுகிறது. தமிழர்களின் மன உணர்வை மதித்தமைக்கு நன்றி’’ என்று இயக்குநர் கீரா தெரிவித்திருப்பதால், 800 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவதாக முடிவெடுத்துவிட்டார் என்பது உறுதியாகிறது.