April 27, 2024

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத்திற்காக போராடவில்லை! செல்வராஜா கஜேந்திரன்

நேற்று 12 டான் தொலைக்காட்சியில் எது சரி எது பிழை நிகழ்சியில் கலந்து கொண்ட கஜேந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத்திற்காக போராடவில்லை  என    தெரிவித்துள்ளார்

கஜேந்திரனின் மேற்படி கருத்தால் சைக்கிள் கட்சிக்கு வடக்கு,கிழக்கில் எழுந்த எதிர்ப்பை சமாழிக்கவும், புலம்பெயர் அமைப்பு ஒன்று வாரி வழங்கும் நிதிக்கு ஆப்பு வைத்த கருத்துக்கு வெள்ளை அடிக்கவும், கஜேந்திரன் 13 இன்று வெளியிட்ட அறிக்கை பின் வருமாறு

தமிழீழ விடுதலைப்புலிகள் தனியரசுக்கான போராட்டத்தையே முன்னெடுத்தார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று 13 ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற விவாதத்தில் என்னுடன் பங்கு கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பைச் சேர்ந்த சுரேஸ் பிறேமச்சந்திரன் விடுதலைப் புலிகள் இயக்கம் தனிநாட்டிற்காகப் போராடி அவர்கள் எதனையும் சாதித்திருக்கவில்லை என்றும், தமிழர்கள் தேர்தல்களில் ஆணை வழங்கிய, தமிழ் மக்களது இருப்பிற்குக் குறைந்தபட்ச பாதுகாப்பினையாவது வழங்கக்கூடிய தேசம் அங்கீகரிக்கப்பட்ட, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நாம் (TNPF) வலியுறுத்தும் சமஷ்டிக்கும் வழிவரை படம் இல்லை என்றும் கூறி மக்கள் மனதில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி, இருப்பதையாவது தக்க வைக்க வேண்டும் என்ற போர்வையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆறுகட்சிகள் கூட்டாகக் கோரும் துரோக நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு முயன்றிருந்தார்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தை மேசையில், ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமானதும் சாத்தியமானதுமான தீர்வை பரிசீலிப்பதற்குத் தயாராகவே இருந்தார்கள் என்ற உண்மையைப் பதிவு செய்யவேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு ஏற்பட்டது.

அந்த வகையில் விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்காகப் போராடி வந்த நிலையில், அரசுடன் நேரடியாக இடம்பெற்ற பேச்சுக்களிலும் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இடம்பெற்ற பேச்சுக்களின்போதும் தமிழ்த் தேசத்தின் இருப்பினை பாதுகாக்கக்கூடிய தீர்வை அரசு தரப்பு முன்வைத்தால் பரிசீலிக்கத் தாயாராக இருந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்த முற்பட்ட வேளையில், நான் கூறிய கருத்துக்களானது, விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்காகப் போராடவில்லை எனத் தவறாக அர்த்தப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது.

தெளிவற்ற வகையில் அக்கருத்து வெளிவந்தமைக்காக நான் மனம் வருந்துகின்றேன். அதன் காரணமாக மனவேதனைக்கும், மனவுளைச்சலுக்கும் உள்ளான தமிழ்த் தேசிய பற்றாளர்களிடம் நான் மன்னிப்பு கோருகின்றேன்.

1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் ஜனநாயக வழியில் முன்வைத்த உரிமைக் கோரிக்கைகளைச் இலங்கை அரசு நிராகரித்தமை மட்டுமன்றி தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தியதன் விளைவாகத் தமிழீழ தனியரசை உருவாக்கும் போராட்டத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிவரை உறுதியாக முன்னெடுத்து வந்தார்கள்.

விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்காகப் போராடி வந்த நிலையில், அரசுடன் நேரடியாக இடம்பெற்ற பேச்சுக்களிலும் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இடம்பெற்ற பேச்சுக்களின் போதும் தமிழ்த் தேசத்தின் இருப்பினை பாதுகாக்கக்கூடிய தீர்வை அரசுத்தரப்பு முன்வைத்தால் பரிசீலிக்கத் தயார் என்பதனை வெளிப்படுத்தி இதயசுத்தியுடன் செயற்பட்டு வந்தார்கள்.

அதன் ஒரு கட்டமாகவே இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைபு முன்வைக்கப்பட்டது. அவ்வாறு விடுதலைப்புலிகள் தயாராக இருந்தபோதும் இலங்கை அரசு எந்தவொரு தீர்வையும் வழங்கத் தயாரில்லாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரிவினையைத் தவிர வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்ற விசமத்தனமான பிரசாரத்தினை சர்வதேச அளவில் முன்னெடுத்தது.

அவ்வாறு அரசு பொய்ப் பிரசாரத்தினை முன்னெடுத்தபோது, அரசின் சதிகளையும், சூழ்ச்சிகளையும் மூடிமறைத்து, அனைத்துப் பழியையும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அரசு சுமத்துவதற்கு இன்று 13ஆம் திருத்தத்தைக் கூட்டாக வலியுறுத்தும் தரப்புப்பிலுள்ளவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடைமுறைச் சாத்தியமான தீர்வைக் காண்பதற்கு விடுதலைப் புலிகள் இடையூறாக உள்ளார்கள் என்று கூறி இலங்கை அரசு எமது மக்கள் மீது இனவழிப்பு யுத்தத்தை முன்னெடுப்பதற்குச் சர்வதேச சமூகம் பூரண ஆதரவு வழங்கியது.

அதன் விளைவு எமது மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், எமது உரிமைக்கான நீதிக்கான விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டமும் மௌனிக்கப்படவே வழிவகுத்தது.

போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் இன்று வரை, அரசு தமிழ் மக்களுக்கு எதனையும் தருவதற்குத் தயாரில்லாதபோதும், இத் தரப்பினர் புலிகள் தனிநாட்டைத் தவிர வேறு எதனையும் ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லாமையினாலேயே அழிக்கப்பட்டார்கள் என்றும், இருப்பதனையும் தவறவிடக்கூடாதென்றும் கூறி மக்களைத் தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளும் நடவடிக்கையில் கடந்த 13 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்திருந்தார்கள்.

தற்போது, ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் மிகப்பலமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலேயே எதனையும் அடைய முடியவில்லை என்றும், முடிந்தவரை அவர்கள் போராடி விட்டார்கள் என்றும் கூறி முதலைக் கண்ணீர் விட்டவாறு இருப்பதனையும் விட்டுவிட்டு என்ன செய்வது?

அதனால் 13ஆம் திருத்தத்தையாவது இறுக்கிப் பிடித்திருக்க வேண்டுமென்று கூறி மக்களை ஏமாற்றி தமிழ் அரசியலை 13ற்குள் முடக்கி தமிழர்களது உரிமைப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சதி செய்கின்றார்கள் என்பதனை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert