Mai 10, 2024

அனைத்தையும் சமரசம் செய்ய முடியாது’ : பாஜக வானதி சீனிவாசன்

கூட்டணிக்காக அனைத்தையும் சமரசம் செய்யமுடியாது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் .

வானதி சீனிவாசன் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவியாக இன்று பொறுப்பேற்று கொண்டார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “தமிழகத்தில் ஆட்சி அமைப்பது பாஜகவின் லட்சியம்; தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது.அதிமுகவுடன் கூட்டணி நன்றாக உள்ளது . ஆனால் கூட்டணிக்காக எதையும் சமரசம் செய்யமுடியாது.வேல் யாத்திரைக்கு காவல்துறை தொந்தரவு உள்ளது; தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கவில்லை ” என்றார்.

இதனிடையே பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கட்சியின் சாதாரண தொண்டரும் உயர்நிலைக்கு வர முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இன்று தேசிய மகளிர் அணி தலைவராக புது தில்லியில் பொறுப்பேற்றுக் கொண்டேன்” என்றார் .