கொரோனா உடலங்களை மன்னாரில் அடக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது – செல்வம்
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/11/template-1-31.jpg)
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இஸ்லாமியர்களின் சடலங்களை அடக்கம் செய்யாதீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-கொரோனா தொற்றினால் இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் வாத பிரதிவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரவர் மத அனுஸ்டானங்களை மதித்து இறுதி சடங்குகள் இடம்பெற வேண்டும் என்பதில் எமக்கு மாறுபட்ட கருத்து இல்லை.
எனினும் கொரோனாவால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் சடலங்களை தமிழர்கள் செறிந்து வாழும் தலைமன்னாரில் அடக்கம் செய்யும் தீர்மானத்தினை அரசாங்கம் எடுக்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வாறான தீர்மானத்தினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறான ஒரு தீர்மானத்தினை இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே எமது விருப்பமாகவும் உள்ளது.
கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்களை மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் அவரவர் மத அனுஸ்டானங்களுடன் அடக்கம் செய்யவேண்டும் என்பதே எமது அவா என்பதுடன் இஸ்லாமியர்களின் சடலங்களை அவர்கள் வாழும் பகுதிகளில் மக்கள் செறிவற்ற பகுதிகளில் அடக்கம் செய்யவேண்டும் என்பதனையும் தெரிவித்துள்கொள்கின்றேன் என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.