எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிரான ராணுவத்தின் ஒரு தரப்பினர் களமிறங்கியுள்ளனர்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. இந்நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகிறார். இவர் 2018-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

எத்தியோப்பியாவில் டிக்ரே என்ற மாகாணம் அமைந்துள்ளது. சூடான், எரிட்ரியா ஆகிய நாட்டுகளின் எல்லையோரம் அமைந்துள்ள இப்பகுதி தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும்.

இந்த மாகாணத்தில் டிக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இந்த பிரிவினர் 2018 ஆம் ஆண்டுவரை எத்தியோப்பிய அரசில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர். மேலும், அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலரும் எத்தியோப்பிய ராணுவத்தில் பெரும் பங்காற்றி வந்தனர்.

தன்னாட்சி பெற்ற டிக்ரே மாகாணத்தை சேர்ந்தவர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் எத்தியோப்பிய ராணுவத்தில் அங்கம் வகிக்கின்றனர். மேலும், சிலர் எத்தியோப்பிய ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

மேலும், இந்த மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து தனியாக பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டிக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், 2018 ஆம் ஆண்டு முதல் அபே அகமது பிரதமராக பதவியேற்றது முதல் டிக்ரேயன்ஸ் எத்தியோப்பிய ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒதுக்கப்பட்டனர். இதனால், மத்திய அரசுக்கும் டிக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தது.

இந்த மோதலின் உச்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிக்ரே மாகாணத்தில் இருந்த டிக்ரேயன்ஸ் சமூகத்தின் ராணுவ பிரிவினர் எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். டிக்ரே மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளையும், ஆயுதக்கிடங்குகளையும் டிக்ரேயன்ஸ் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கைக்கு எத்தியோப்பிய ராணுவத்தின் உயர்பொறுப்புகளில் இருந்த டிக்ரேயன்ஸ் சமூகத்தினரும் உதவி செய்தனர். இதனால் பயனாக டிக்ரே மாகாணம் எத்தியோப்பிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. மேலும், டிக்ரேயன்ஸ் எத்தியோப்பிய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாட்டின் பிற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தை டிக்ரே மாகாணத்தில் பிரதமர் அபே அகமது களமிறக்கினார். அங்கு டிக்ரேயன்ஸ் சமூகத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களும், ராணுவத்தினரும் இணைந்து மத்திய படையினருக்கு எதிராக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோதலில்  டிக்ரேயன்ஸ் சமூக ராணுவ, கிளர்ச்சியாளர்கள் 550 பேர் உயிரிழந்துள்ளதாக எத்தியோப்பிய ராணுவம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.