Mai 14, 2024

வடக்கு மொசாம்பிக்கில் தலைகீழாக தொங்கவிட்டு தலையை வெட்டிகொன்ற பயங்கரவாத அமைப்பு!

வடக்கு மொசாம்பிக்கில் கபே டெல்கடோ பிராந்தியத்தின் நஞ்சாபா கிராமத்தில் உள்ள 50 பேரை தலைகீழாக தொங்கவிட்டு தலையை வெட்டிகொன்றுள்ளனர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினைச் சேர்ந்தவர்கள்.

ஒரு கால்பந்து மைதானத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடந்த இந்த பயங்கர செயலினால் ஆப்பிரிக்காவே அதிர்ந்துபோயிருக்கிறது.

நஞ்சபா கிராமத்தில் இரவு நேரத்தில் புகுந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்து தீக்கிரையாக்கினர். தூங்கிக்கொண்டிருந்தவர்கள் தீப்பற்றி எரிந்ததும் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். அப்படி ஓடியவர்களை பிடித்து இழுத்துகொண்டு போய், கால்பந்த மைதானத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தலையை வெட்டி கொன்று தங்களது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம்கள் ஆதிக்கத்தில் இருக்கும் காபோ டெல்கடோ மாகாணத்தில் கடந்த 2017 முதல் பயங்கரவாதிகள் இதே போல் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதுவரையிலும் 2 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தாக்குதலினால் 4,00,000 பேர் வீடுகளை இழந்து நிற்கின்றனர். இதுவரை நடந்த தாக்குதல்களிலேயே கடந்த வெள்ளி அன்று நடந்த தாக்குதலும், அப்போது 50 பேர் வெட்டிக்கொல்லப்பட்டதும்தான் ரொம்ப கொடூரமானது என்று கூறப்படுகிறது.

பிராந்தியத்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்கிற வேட்கையில் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

வேலை இல்லாமலும், வறுமையாலும் வாடும் இளைஞர்களை மூளைசலவை செய்து தங்களது குழுவில் சேர்த்து வருகிறது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.