April 28, 2024

வன்முறைக் கும்பலினால் செம்மணி இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் விசேட அதிரடிப் படையினரால் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் செயற்படும் வன்முறை குழு ஒன்றினால் ஜாபான மனதிற்குள் புதைத்து வைக்கப்பட்டுள்ள மிதிவெடி மற்றும் கைக்குண்டுகள் இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவின்பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்றைய தினம் அகழும் பணி முன்னெடுக்கப்படுகின்றது

வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நிசா விக்டரை வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்தோடு செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பனவும் நிசா விக்டரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மீது பிறிதொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கிலும் சந்தேக நபருக்கு வரும் 22ஆம் திகதிவரை

விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை  விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த  விக்டர் சுந்தர்,  பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நிசா விக்டர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

„சந்தேக நபர், நபர் ஒருவரை வெட்டி படுகாயம் ஏற்படுத்தியதன் மூலம் அவரைக் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

அத்தோடு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவேடி என்பனவும் மறைத்து வைத்திருந்தமை காண்பிக்கப்பட்டுள்ளது. அவை நீதிமன்றின் உத்தரவில் மீட்கப்படவேண்டும்“ என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பிணை விண்ணப்பத்தை முன்வைத்தனர்.

இருதரப்பு விண்ணப்பத்தையும் ஆராய்ந்த மன்று, சந்தேக நபரை வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.