Mai 2, 2024

மீனவர் பிரச்சினை – இந்தியாவின் முயற்சிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மதிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஊடக அறிக்கை

வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இன்றய தினம் 09-02-2022 புதன்கிழமை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகிய நான் முன்மொழிந்து பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்து விவாதத்தை ஆரம்பிக்கும் வகையில் எமது தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருநத்து.

அதன் பிரகாரம் குறித்த பிரேரணை இன்று பி.ப 4.50 மணியளவில் விவாதத்திற்கு கொண்டுவரப்படும் வகையில் நாடாளுமன்றில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக எமது மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்காது, அவர்களது வலைகள் அழிக்கப்படுவதனையும், படகுகள் சேதமாக்கப்படுவதனையும், மீனவர்கள் தாக்கப்படுவதனையும், கொல்லப்படுவதனையும் இலங்கை கடற்படையும் சிறீலங்கா அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றமை தொடர்பில் குறித்த விவாதத்தினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.


இந் நிலையில், இன்று நண்பகல் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு, எம்மால் முன்னெடுக்கபப்படவிருந்த விவாதம் தொடர்பில் கலந்துரையாடினார். அதன்போது நாம், எமது வட பகுதி மீனவர்களது கடற்தொழிலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை கடற்படை நடவடிக்கை எடுக்காது எமது வடபகுதி மீனவர்களுக்கும் எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கும் இடையில் மோதலை தீவிரப்படுத்தி பகைமையை வளர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் நாம் குறித்த விவாதத்தை ஏற்பாடு செய்துள்ளோம் என்பதனை தெரிவித்தோம்.

அதன்போது, தூதரக அதிகாரி, இப்பிரச்சினை தொடர்பில் தமது தரப்பிலிருந்தும் தாம் அக்கறை செலுத்துவதாகவும், மேற்படி மீனவர் பிரச்சினையானது யாழ்ப்பாணத்திலும், தமிழகத்திலும் ஓர் நெருக்கடி மிகுந்த சிக்கல் நிலைக்கு வந்துள்ளதாகவும், அந்த நெருக்கடி நிலையை தாம் புரிந்து கொண்டுள்ளதாகவும், அந்தவகையில் இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்துவதற்குத் தாம் முடிவெடுத்துள்ளதாகவும், தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் முகமாக குறித்த விடயத்தினை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கேடடுக் கொண்டார்கள்.

அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்களது பிரச்சினையை தீர்ப்பதற்கான அவர்களது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் குறித்த பிரேரணையை இன்று விவாதத்திற்கு எடுப்பதனைத் தவிர்த்துக் கொண்டுள்ளோம்.


செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert