Mai 2, 2024

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு நாடாளுமன்றில் கிடைத்த உயர் பதவி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சபாநாயகர் குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அமர்வில் பிரசன்னமாகாத சந்தர்ப்பத்தில் அவையை கொண்டு நடத்தும் பொறுப்பு இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தனது நாடாளுமன்ற கன்னி உரையில் நாடாளுமன்றத்தில் மும்மொழியிலும் உரையாற்றிய இரா.சாணக்கியன் பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற இரா.சாணக்கியனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

சமூக வலைத்தளங்களிலும் அவரது கன்னியுரை வைரலாகியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவியானது அவருடைய மும்மொழி திறமைக்கும் ஆளுமைக்கும் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இரா.சாணக்கியன் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது சிறிது நேரம் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.