Mai 4, 2024

கலவரபூமியாகும் அமெரிக்கா…காரணம் என்ன ??

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஜோர்ஜ் புளோயிட் என்ற கருப்பினத்தவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் கலவரங்களும், போராட்டங்களும் நடைபெற்று வந்தன. தற்போது பல இடங்களில் சகஜ நிலை திரும்பியுள்ள நிலையில் போர்ட்லேண்ட் பகுதியில் மட்டும் இன்னும் போராட்டம் நடந்து வருகின்றது.

போர்ட்லேண்ட் போராட்டக்காரர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. கற்கள், மிளகு பொடி என கிடைத்ததை கொண்டு ஒருவரையொருவர் தாக்கியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த கலவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.