April 27, 2024

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பி.கோணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் பி.கோணேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் தவறானது என பலர் தற்போது கூறி வருகின்றனர்.

இவ்வாறு கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் யாரென்று பார்த்தால், தேசியக் கட்சிகளின் முகவர்களாகவும், தரகர்களாகவும் செயற்படுபவர்களே ஆகும்.

இத்தகையவர்களுக்கு கூட்டமைப்பில் உடன்பாடு இல்லை என்றால், வெளியில் சென்ற எல்லோரும் ஒருமித்து ஒரு கட்சியாக மாறியிருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் ஒவ்வொருவரும் தனிதனியாக ஒரு கட்சியை உருவாக்கி வியாக்கியானம் பேசுகின்றார்கள். இவ்வாறு செயற்படுவதினால்  தமிழர்களின் அபிலாசைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாக மாத்திரம் தான் தமிழர்களின் எதிர்காலத்தை அடைய முடியும்.  ஆகவே அவர்களை மக்கள் வெற்றியடைய செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.