Mai 19, 2024

இந்தியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை கொடுத்த சீனா.!!

கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே மறைமுக மோதல் போக்கு வலுப்பெற்று வருகிறது. இந்த மோதலில் இந்தியா தலையிட வேண்டாம் என்று கூறி எச்சரிக்கை விடும் பாணியில் சீனா இந்தியாவை மிரட்டியுள்ளது.

இந்த பனிப்போரில் சீனாவை தாக்கும் அமெரிக்க சிப்பாயாக இந்தியா மாற வேண்டாம் என்றும், அமெரிக்க சிப்பாயாக இந்தியா மாறும் பட்சத்தில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை சந்திக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக சீன பத்திரிகையில் வெளியாகியுள்ள தகவலில், தேசியவாத உணர்வு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பனிப்போரில் சேர மற்றும் இலாபத்தை கணக்கில் கொண்டு இந்திய அரசிற்கு பல ஆதரவு குரல் வருகிறது.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே உள்ள மோதலில் இந்தியாவிற்கு அதிக இலாபம் இருக்காது. ஆதாயத்தை விட இழப்புகளே அதிகளவு இருக்கும். மோடி அரசு புவிசார் வளர்ச்சியை புறநிலை மற்றும் பகுத்தறிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.

சீனாவுடன் கொண்ட உறவில் ஏற்படும் பிரச்னையை கையாள்வதில் அமெரிக்காவை இந்தியா அழைக்க கூடாது. அவ்வாறு இடையில் அமெரிக்கா வரும் பட்சத்தில், இந்திய – சீன உறவு கடுமையாக சிக்கலை சந்திக்கும்.

சீனா – இந்தியா எல்லை பிரச்சனையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வது தேவையில்லாதது. இரு நாடுகளும் தங்களின் பிரச்சனையை அமைதியாக தீர்த்துக்கொள்ளும். இந்த விவகாரத்தில் மூன்றாம் தலையீடு அனாவசியமற்றது என்று கூறியுள்ளது. சீன பத்திரிகையின் இந்நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.