April 27, 2024

இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் பற்றிய தீ…

மான்செஸ்டரிலிருந்து போர்ச்சுகல் நோக்கிப் புறப்பட்ட Ryanair நிறுவன விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது தீப்பற்றியதையடுத்து, அது அவசரமாக பிரான்சில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மாலை 6.33 மணியளவில் மான்செஸ்டரிலிருந்து போர்ச்சுகல்லிலுள்ள Faro என்ற இடம் நோக்கி Ryanair நிறுவன விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அது இரவு 9.30 மணியளவில் போர்ச்சுகல்லை அடையவேண்டிய நிலையில், திடீரென விமானத்துக்குள் தீப்பற்றியுள்ளது.

உடனடியாக 35,000 அடி வரை வேகமாக விமானத்தை கீழ் நோக்கி இறக்கிய விமானிகள், மேற்கு பிரான்சிலுள்ள Brest என்ற இடத்திலுள்ள விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்கள்.

விமான ஓடு பாதையின் அருகே தீயணைப்பு வாகனங்கள் பல தயாராக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், விமானம் தரையிறங்கியதும் பொலிசார் விமானத்திலிருந்த பயணிகளை இறக்கி, பேருந்து ஒன்றில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்கள்.

விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தார்கள், எதனால் விமானத்தினுள் தீப்பற்றியது என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், அந்த விமானத்த்ல் பயணித்த விமானிகளுக்காக Stansted விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் அனுப்பப்பட்டு, அவர்கள் போர்ச்சுகல் நோக்கி புறப்பட்டுவிட்டதாக தெரியவந்துள்ளது.