Mai 9, 2024

இது தமிழர்களின் ஆன்மாவை உலுக்கும் செயல் எதிர்ப்பு தெரிவிக்க ஓரணியில் அணிதிரள்வோம் – மாவை அறைகூவல்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்தது மிகப்பயங்கரமான விடயம். தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசு கைவைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

யாழ் பல்கலைகழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கோட்டாபய அரசு இன்று இரவோடு இரவாக இடித்தழித்தது.

இந்த நடவடிக்கை குறித்து அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தவும் தடைவிதித்த மிலேச்சனமான ஆட்சியின் நீட்சியே இந்த நடவடிக்கைகள் என கண்டித்தார்.

“இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. இதற்கு எதிராக எமது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ய வேண்டும். நாளை காலையில் அனைத்து கட்சிகள், தரப்புக்களுடன் இது குறித்து ஆராய்ந்து வலுவான நடவடிக்கையை எடுப்போம். இந்த மிலேச்சனமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைத்து தமிழ் மக்களும் அணிதிரள வேண்டும்“ என அழைப்பு விடுத்தார்.