Mai 10, 2024

பிரான்சில் 15 டிசம்பர் உள்ளிருப்பு சட்டம் தளர்த்தப்படுமா?…ஒரு பார்வை.,ஜஸ்ரின் தம்பிராஜா

பிரான்சில் 15 டிசம்பர் உள்ளிருப்பு சட்டம் தளர்த்தப்படுமா?…
ஜனவரி 20 உணவகங்கள் அருந்தகங்கள் திறக்கப்படுமா?….
ஒரு பார்வை.
பிரான்சில் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த உள்ளிருப்பு சட்டம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 15-ம் தேதியோடு முழுவதுமாக அகற்றப்பட்டு; அதற்குப் பதிலாக ஊரடங்குச் சட்டம் இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 7 மணி வரை அமுலுக்கு வரும், என்னும் அரச தலைவரின் அன்றைய அறிவித்தலால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் அதே உரையில் அரசு தலைவர் ஒரு குண்டையும் தூக்கிப் போடாமல் இல்லை. அதாவது
„டிசம்பர் மாதம் 15ஆம் திகதியை அண்டிவரும்போது,கொரோனா வைரஸ் தொற்றானது குறைந்தது நாள் ஒன்றுக்கு 5,000 ஆக இருக்க வேண்டும், மருத்துவமனைகளில் அவசர பிரிவில் இருக்கக்கூடிய கட்டில்களில் 3 ஆயிரத்தைத் தாண்டாமல் இருந்தால் மட்டுமே 15/12/2020 உள்ளிருப்பு சட்டம் நீக்குதல் சாத்தியமாகும்“
என்று அரச தலைவர்தெரிவித்து இருந்தார். ஆனால் இன்றைய நிலையில் இது சாத்தியமில்லாமல் போகிறதோ? என்றே எண்ணத் தோன்றுகின்றது.
காரணம் 06/12/2020 அன்று கொறோனாத் தொற்று 11 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், 3100 நோயாளிகள் அவசர பிரிவில் இருக்கின்றனர். எனவே எதிர்வரும் 15 ஆம் திகதி உள்ளிருப்புச் சட்டம் முழுமையாக தளர்த்தல் சாத்தியமா? … கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புத்தாண்டு கொண்டாட்டம், உறவினர்களுடன் சாத்தியமா? என்னும் கேள்வி இப்போது எழுந்து பிரான்ஸ் மக்கள் முன் நிற்கிறது.
எங்கள் தொழிலாளர்கள் முன் எழுந்து நிற்கின்ற மற்றும் ஒரு கேள்வி
“ இதே நிலையில் சென்றால் ஜனவரி மாதம் 20ஆம் திகதி உணவகங்கள் அருந்தகங்கள் திறக்கக் கூடிய சாத்தியக்கூறு தென்படுமா?“
என்பதுதான். ஏனென்றால் எம்மவர்களில் கூடுதலானவர்கள் உணவகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், உணவகங்களை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் இவர்களின் நிலை என்ன?
ஜஸ்ரின் தம்பிராஜா