Mai 6, 2024

இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவே முடியாது – சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை

நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவே முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் மூலம் கையாள இந்தியா முயற்சிக்கிறது என வெளிவரும் செய்தி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்:-

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடவே முடியாது. அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் இலங்கை – இந்தியா உடன்படிக்கையின் பிரகாரம் அன்று நிறைவேற்றப்பட்டமை உண்மை. அதற்காக இந்தியா இன்று சொல்வதையெல்லாம் நாம் ஏற்கவேமாட்டோம்.

இந்த விவகாரத்தில் இந்தியா அமைதியாக இருப்பதே நல்லது. 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவே முடியாது. இந்தத் திருத்தத்தின் பிரகாரம்தான் இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. அதாவது இலங்கை 9 துண்டுகளாக்கப்பட்டன.

இதனால்தான் LTTEயின் கையும் ஓங்கின. அதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமது தாயகம் என்று தமிழர்கள் உரிமை கோரினர். இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் தமிழர்கள் இருக்கின்றார்கள். அதனால்தான் தனிநாட்டுக் கோரிக்கை அன்று தொடக்கம் இன்று வரை வலுப்பெறுகின்றது.

13வது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்குச் சிக்கலுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் மாகாண சபைகளுக்குக் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டாம் என்று நாம் கூறுகின்றோம்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக 13வது திருத்தத்தில் உள்ள சிக்கலான விடயங்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். அதன் பின்னர்தான் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.