Mai 3, 2024

சிவாஜி தடுப்பில்:வெள்ளி மீண்டும் கூட்டம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இதுவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் கோப்பாய் காவல்நிலையத்திலேயே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இன்றிரவு சிறீகாந்தா மற்றும் விந்தன் கனகரட்ணம் உள்ளிட்ட பலரும் அவரை பார்வையிட்டுள்ளனர்.

நாளை அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டால் சிறீகாந்தா தலைமையில் சட்டத்தரணிகள் குழுவொன்று அவர் சார்பில் ஆஜராகவுள்ளது.

இதனிடையே தியாகதீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு இந்த அரசால் நீதமன்றம் மூலம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இனிவரும் காலங்களில் எமது மக்களின் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை இந்த அரசு தடைசெய்யும் என்பதால் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய முன்நகர்வுகள் தொடர்பாகவும் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கிய சந்திப்பொன்றை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.