Mai 2, 2024

ஜனாதிபதி விதித்துள்ள தடை உத்தரவு

இலங்கை மக்களுக்கான மஞ்சள் தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று இதை தெரிவித்தார். உள்ளூர் விவசாயிகளை பாதுகாப்பதற்காக மஞ்சளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது என்றும் அமைச்சர் பெர்னாண்டோ கூறினார்.

நாட்டில் தற்போது மஞ்சள் ஒரு கிலோவின் விலை ரூ. 4,000 முதல் ரூ. 5,000 வரை விற்பனையாகின்றது.

இந்த நிலையில் இறக்குமதியை நம்பாமல் இலங்கை உள்நாட்டில் மஞ்சளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் ஏன் மஞ்சளை இறக்குமதி செய்யவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

நாங்கள் அதை அனுமதித்தால் இறக்குமதியாளர்கள் பெரியளவில் இறக்குமதி செய்து அவற்றை சேமித்து வைப்பார்கள்.

நாட்டில் அறுவடை நடைபெறும் நேரத்தில் அவர்கள் தங்கள் பங்குகளை விற்பனைக்கு விடுவிப்பார்கள். இந்த நிலைமை உள்ளூர் விவசாயிகளை பாதிக்கின்றது. இது உள்ளூர் தொழில்துறையை வீழ்ச்சியடையச் செய்கிறது என்று அமைச்சர் கூறினார்.

மேலும் கோதுமை மாவு இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைத்து, மாற்றுப் பயிராக மக்காச்சோளத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.